வெங்கிட்டம்மாள் கைங்கர்யம் (பகுதி - 1)

        



இந்த பிரபஞ்சம் விஞ்ஞானிகளாலும், ஆன்மிக நெறியாளர்களாலும் அளவிட முடியாத அளவுக்கு விரிவடைந்து கொண்டிருக்கிறது. அதில் எது முடிவு என்று நினைக்கிறீர்களோ, அங்கு தான் புதிய ஆரம்பம் இருக்கிறது. திசை, தூரம், காலம் மற்றும்  பொருள் என்பதெல்லாம் இங்கு வெறும் அற்பமான விஷயம். நாம் இருப்பது (Solar system) சூரிய குடும்பத்தில். இது போன்று கோடிக்கணக்கான சூரிய குடும்பங்களால் ஆனது நம் (Milky way)பால் வீதி.


இது போன்று எண்ணிலடங்கா பால் மண்டலத்தைக் கொண்டது பெரிய (universal space)அண்டவெளி. ஒளி வேகத்தில் சென்றாலே பால்மண்டலத்தில் ஒரு குறிப்பிட்ட தொலைவை அடைவதே மிகக்கடினம். இதற்கு நம் சராசரி ( ? ) ஆயுளான 100 ஆண்டுகள் போதவே போதாது. அப்பாலுக்கு அப்பால் அதற்கும் மேல் இருப்பது என்னவென்று விஞ்ஞானிகள் தொலைநோக்கியில் உற்று நோக்கிக் கொண்டிருக்கிறார்கள். 


இந்நிலையில் பாரத தேசத்து மெஞ்ஞானிகள் திகைத்து அந்த எல்லையற்ற சக்தியை இறைவன் (பகவான்) என்றுகொண்டாடினர். இந்த பிரபஞ்சத்தில் நாம் கற்றது கைம்மண் அளவு தான்.  இந்த உலகம் எந்த பாதிப்பும் இன்றி அதன் பயணத்தை தொடர  எங்கோ ஓர் இயற்கை கட்டளை மறைந்துள்ளது.
அதை உணர நாம் முற்படும் போது அந்த இயற்கை முன் நாம் சிறு துரும்பாக நிற்கிறோம். இந்த இயற்கையை படைத்தவரை எண்ணிப் பார்க்கும் போது மனதில் ஓர் பக்தி ஏற்படுகிறது. ஆம்! மாற்றத்தையே மாறாததாக கொண்டுள்ள இந்த உலகில் மாறாதது பக்தி மட்டுமே. பக்தி என்பது அன்பின் வெளிப்பாடு. பக்திக்கு முதல் தேவை மமதை இன்மை. எதையும் எதிர்ப்பார்க்காத அன்பே பக்தி. பக்தன் என்பவன் தனக்கு மேல் ஒருவர் இருப்பதை உணர்வுபூர்வமாகப் புரிந்துகொண்டு நடக்கிறான். பக்தியில் ஒன்பது வகைகள் உள்ளன. அவற்றை விளக்கும் வடமொழிப் பாடல் கீழே.

"ஸ்ரவணம் கீர்த்தனம் விஷ்ணுஹு
ஸ்மரணம் பாத சேவனம்
அர்ச்சனம் வந்தனம் தாஸ்யம்
சாக்கியம் ஆத்ம நிவேதனம்.”

ஸ்ரவணம் – கேட்பது; கீர்த்தனம் – பாடுவது; ஸ்மரணம் – நினைப்பது, அசை போடுவது; பாத சேவனம் – திருவடிகளில் அடைக்கலம்; அர்ச்சனம் – துதிப்பது; வந்தனம் – வணங்குவது; தாஸ்யம் – சொல்வதை சிரமேற் கொண்டு செய்வது; சாக்கியம் – நட்புடன் இருப்பது; ஆத்ம நிவேதனம் – பரிபூரண சரணாகதி.

விஞ்ஞானத்தின் எல்லா சாதனைகளும் ஆராய்ச்சியின் முடிவுகள்  மனித வாழ்க்கையை மேலும் சிக்கலுடையதாகவும், படோடபமுடையதாகவும் செய்கின்றன. மனிதனுடைய உண்மையான மனஅமைதிக்காக அது எந்த உதவியும் செய்யவில்லை. அதே வேளையில் மன அமைதிக்காக பாரத தேசத்து மெஞ்ஞானிகள் ஆன்ம ஞானத்தை  தேடினர். இதன் மூலம் எல்லையற்ற இறைவனை (பரமாத்மா) அறிந்து ஆனந்தமடைந்தனர்.


 ஆன்மநெறிக்காக 'கர்மா' என்கிற கட்டமைப்பிருக்க சமீப காலமாக 'பரிகார ஆன்மிகம்' என்ற சனாதன தர்ம விரோதமான ஒன்றை 'ஜ்யோதிஷ ஆஷாட பூதிகள்' அற்ப பணத்திற்காக எளிய சாதாரண பக்தர்களை குழப்பி வருகின்றனர்.  தீவினைகள் மற்றும் நல்வினைகள் செய்தவர்களானாலும் பிறவிச்சுழற்சியில் இருந்து தப்பி, பிறப்பிலா பெருவாழ்வு அடைய இயலாது. பிறப்பிலா பெருநிலை என்பது, வாழ்வின் ஒரு குறிப்பிட்ட நிலையில் அனைத்து தீவினை மற்றும் நல்வினைப்பயன்களிலிருந்து விடுபட்டு, மனவடக்கம், புலனடக்கம்,தியாகம், தவம் போன்ற நற்குணங்களுடன் குரு மற்றும் மெய்யியல் சாத்திரங்களின் துணையுடன் ஆத்மாவை அறிந்து மன அமைதி பெறுதலே மரணமிலாப் பெருவாழ்வு (மோட்சம்) நிலைக்கு வழி வகுக்கும்.

ஆனால் தற்போது ஆன்மிகத்தை மன அமைதிக்கும் செயலாக்கத்திற்கும் நாடுவதற்குப் பதிலாக வெற்றிக்கான குறுக்கு வழியாகக் கருதும் 'ஜ்யோதிஷ பற்றாளர்கள்' (Astro mania)அதிகம் பெருகியதால் பக்தியை நுகர்பொருளாக்கும் (Consumer product) ஆன்மிக கார்ப்பரேட் சாமியார்களாகிய வியாபாரிகளும் பெருகினார்கள்.

ஸ்ரீய:பதியாய் அவாப்த சமஸ்த காமனாய் ஸ்ரீ வைகுண்ட நிகேதநனான சர்வேஸ்வரன், நித்ய சம்சாரிகளான பரிகார பக்தர்களான இந்த சேதனர்கள் போன்றோர் மீது இரக்கம் பிறந்து, நித்ய கைங்கர்ய பரர்களான நித்ய முக்தரோடே கூடி  அவனை அனுபவிக்கிற பேற்றை பெறுவதற்காக மட்டுமே, அவர்கட்கு கரண களேபரங்களைக் கொடுத்தருளியுள்ளான்.

அவர்கள் அக்கரணகளேபரங்களைக் கொண்டு அவனுடைய திவ்யச் சரிதைகளை பேசி வாய் வெருவவும்,கைகளாரத் தொழவும்,திவ்ய தேசங்களை நாடி நடக்கவும் வேண்டும்.
ஞான, பக்தி, வைராக்கியங்கள் மிகுந்து ஆண்டவனின் நினைவிலேயே உருகி உள்ளம் கனியப் பாடி உண்டியே உடையே என உகந்தோடும் மக்களோடு கலவாமல் உலகியல் ஆசைகளில் பற்றறுத்து,
 எவ்வித பலனும் கருதாமல், தங்களை உடல்,மன அளவிலும், மற்றும் ஆன்ம அளவிலும் முழுவதுமாக, பரமாத்மாவான ஸ்ரீமந்நாராயணனிடம் ஒப்புவிக்க வேண்டும்.

உலகியல் விஷயாந்தரங்களைக் கண்ட கண்களையும், பேசிய வாயையும் சுத்தி பண்ணும் பொருட்டு, ஸமஸ்த கல்யாண குணனான எம்பெருமானை பற்றியும், ஆழ்வார்கள் மற்றும் ஆசார்யர்களைப் பற்றியும்  பகவத்,பாகவத கைங்கர்யம் பண்ணின ஞானாத்மாக்களை பற்றியேனும்  வாயாரப்பாடி மனதாரச் சிந்திந்து அறிந்து கொள்ளுதல் ஸுஹ்ருதமாகும்.

அப்படிப்பட்ட ஞானாத்மாக்கள் பலரும் பரமாத்மாவின் நிர்ஹேதுக கடாட்சத்தால் நம் கர்மபூமியான பாரதத்தில் பிறக்கத்தான் செய்தனர். அந்த எண்ணிலடங்கா பட்டியலில் நாம் புதிதாக ஒரு பகவத்,பாகவத கைங்கர்யபரர் ஒருவரை அறிந்து கொள்வோம்.
 

மதுரை வடக்கு மாசி வீதி இராமாயணச் சாவடி தெருவில் வாழ்ந்த ஸ்ரீவிஷ்ணு பக்த சிரோண்மணியான ஸ்ரீமதி வெங்கிட்டம்மாள் அவர்கள் செய்த பகவத்,பாகவத கைங்கர்யங்களில் அடியேன் சிலவற்றைக் கூறுகிறேன். ஸ்வாமி கூரத்தாழ்வான் மிகவும்  ஆசைப்பட்ட யாதவ குலத்தில் பிறந்த கோப ஸ்த்ரீயான வெங்கிட்டம்மாள் இளம் வயதிலேயே விஷ்ணு பக்தியில் அதீத ஈடுபாடு கொண்டவர். அதற்கேற்றாற் போல அவர் வாழ்ந்த இராமாயணச்சாவடி பகுதியும் அவரது பக்தி,ப்ரபத்திக்கு உற்ற துணையாக அமைந்தது.

 ஸ்ரீவைஷ்ணவ நெறியாளர்களின் வழிகாட்டுதலின் படி ஸ்ரீமதி வெங்கிட்டம்மாள் பகவத்,பாகவத கைங்கர்யங்கள் பலவற்றை செய்து மரணமில்லா பெருவாழ்வான கண்ணன் கழலினையடைந்த புண்ய கதையினை விரிவாக அடுத்த பதிவு- Post ல அடியேன் கூறுகிறேன்.

அன்புடன்

 ஸ்ரீ பா ல சு பி க் ஷ ம்
E.P.I. இராம சுப்பிரமணியன் 


Comments

Popular posts from this blog

சிறுதெய்வங்களோடு வந்த பெருந்தெய்வங்கள் (பகுதி-1)

காலந்தோறும் மதுரை (பகுதி − 1)

கோதையின் கீதை (பகுதி - 33)