கோதையின் கீதை (பகுதி - 3)





श्री:
श्री श्रियै नम: ॥
श्रीमते रामानुजाय नमः ॥

श्रीशैलेश दयापात्रम् धीभक्त्यादि गुणार्णवं I 
 यतीन्द्र प्रवणम् वन्दे रम्यजामातरम् मुनिम् II

लक्ष्मी नाथ समारम्भाम् नाथयामुन मध्यमाम् I
अस्मदाचार्य पर्यन्ताम् वन्दे गुरु परम्पराम् II

यो नित्यं अच्युत पदाम्बुज युग्मरुक्म
व्यामोहतस् तदितराणि त्रुणाय मेने I
अस्मद् गुरोर् भगवतोस्य दयैकसिन्धोः
रामानुजस्य चरणौ शरणम् प्रपद्ये  II

माता पिता युवतयस् तनया विभूति:
सर्वम् यदेव नियमेन मदन्वयानाम् I
आद्यस्य न: कुलपतेर वकुळाभिरामम्
श्रीमत तदङ्घ्रि युगळम् प्रणमामि मूर्ध्ना II

भूतं सरस्य महदाह्वय भट्ट नाथ
श्रीभक्तिसार कुलशेखर योगिवाहान्  I
भक्ताङ्घ्रिरेणु  परकाल यतीन्द्रमिश्रान
श्रीमत् पराङ्कुश मुनिम् प्रणतोस्मि नित्यं II




நாலாயிர திவ்வியப் பிரபந்தம்  எனும் நூலில் தொகுக்கப்பட்டுள்ள பிரபந்தங்கள் 24 ஆகும். இவை ஒவ்வொன்றுக்கும் தனித்தனியே 'தனியன் பாடல்கள்" உள்ளன. இவை அப் பிரபந்தங்களுக்குச் 'சிறப்புப் பாயிரம்' போல அமைந்துள்ளன. வைணவர்கள் இந்தத் தனியன்களை பாடிய பின்னரே பாசுரங்களை பாடுவது வழக்கம். சில பிரபந்தங்களுக்கு வடமொழித் தனியன்களும் உள்ளன. தமிழிலுள்ள தனியன் பாடல்கள் மொத்தம் 34.
இவை பெரும்பாலும் ஆழ்வார்களுடைய கதைகளில் வரும் முக்கியமான நிகழ்வுகளை நினைவுபடுத்தும் விதமாக அமைந்துள்ளன.
இவற்றுள் இரண்டொரு பாடல்கள் நீங்கலாகச் சம்பிரதாயமாக வழங்கும் ஏனைய பாடல்களுக்குப் "ஸ்ரீபிள்ளை லோகஞ்சீயர்" விரிவுரை  எழுதியிருக்கிறார். இவை ஸ்ரீபெரியவாச்சான் பிள்ளை வியாக்கியானத்தோடு சேர்த்துப் பதிப்பிக்கப்பட்டுள்ளன. மற்றும் பிரபந்தங்களுக்கு முற்சேர்க்கையாகவும் பதிப்பிக்கப்பட்டுள்ளன. தனி நூலாகப் பதிப்பிக்கப்படவில்லை. தனியன் பாடல்களின் பொருள் இவற்றில் விரித்துரைக்கப்பட்டுள்ளன.
• ஆண்டாளின் திருப்பாவைக்கு மூன்று தனியன்கள் உண்டு.
முதலாவது தனியன் ஸ்ரீ பராசர பட்டர் சாதித்தது. இரண்டாவது மற்றும் மூன்றாவது தனியன்கள்
ஸ்ரீ உய்யக்கொண்டார் அருளிச்செய்தது

 || திருப்பாவை தனியன்கள் ||




• ஸ்ரீ பராசர பட்டர் அருளிச்செய்தது


நீளாதுங்க ஸ்தன கிரிதடீஸூப்தம்
     உத்போத்ய க்ருஷ்ணம்
பாரார்த்யம் ஸ்வம் ச்ருதி சதசிரஸ்
     ஸித்தம் அத்யா பயந்தீ
ஸ்வோச் சிஸ்டாயாம் ஸ்ரஜிநிகளிதம்
     யா பலாத்க்ருத்ய புங்க்தே
கோதா தஸ்யை நம இதமிதம்
     பூய ஏவாஸ்து பூய :

(பொருள் :- நீளாதேவியின் அம்சமான நப்பின்னைப் பிராட்டியின் உயர்ந்து பருத்த முலைத்தடங்களாகிற மலையடிவாரத்திலே உறங்குகின்றவனும், தான் சூடிக் கொடுத்த மாலையாலே கட்டுப்பட்டவனும் ஆன கிருஷ்ணனுக்கு அவனுடைய பாரதந்த்ர்யத்தை (அதாவது ஆத்மாக்கள் அவனிட்ட வழக்காயிருந்து அவனுக்கே பயன்படுவதை) உணர்த்தி எம்மை அடிமைகொள்ள வேணும் என்று நிர்பந்தித்த ஆண்டாளை நமஸ்கரிக்கிறேன் என்று இந்தத் தனியனை சமர்ப்பிக்கிறார் ஸ்ரீ பராசர பட்டர்.)

பதவுரை:
நீளா- நப்பின்னைப் பிராட்டியுடைய;
துங்க-உயரமான;
ஸ்தநகிரி-முலையாகிய மலையின்;
தடீ- தாழ்வாரத்தில்
ஸுப்தம்-தூங்குகின்றவனான;
க்ருஷ்ணம்-கண்ணனை;
உத்ப்போத்ய-நன்றாக எழுப்பி;
சத-நூற்றுக்கணக்கான;
ச்ருதிசிரஸ்-வேதாந்தங்களில்;
ஸித்தம்-முடிந்தபொருளாகச் சொல்லியிருக்கிற;
ஸ்வம்-தன்னுடைய;
பாரார்த்யம்-பரத்வத்தை;
அத்யாபயந்தி-சொல்லிக்காட்டுகிறவளும்;
ஸ்வ-தன்னுடைய;
உச்சிஷ்டாயாம்-சூடிக்களைந்ததான;
ஸ்ரஜி-மாலையில்;
நிகிளிதம்-நன்றாகக்கட்டுப்பட்டவனாயிருக்கின்ற அந்தக்கண்ணனை
யா-எவள்;
பலாத்க்ருத்ய-பலவந்தப்படுத்தி;
புங்க்தே-அவனுடைய குணங்கள், செயல்களை அனுபவிக்கிறாளோ (அப்படிப்பட்ட)
கோதா-கோதை யென்று ப்ரஸித்தமான;
தஸ்யை-அவள்பொருட்டு;
இதம் இதம் நம- இத்தகைய படிகளில் நமஸ்கரிக்கிறேன்;
பூய ஏயவாஸ்து பூய-இவ்விதமே மறுபடியும் நமஸ்கரிக்கின்றேன்.

 திருவரங்கம் பெரியகோயிலில் ஸ்வாமி கூரத்தாழ்வான் திருக்குமாரனாகிய  'பராசர பட்டர்' தர்சன ப்ரவர்த்தகராயிருந்த நாளில் ஏழு திருச் சுற்றுக்களில் ஆறாவது திருச்சுற்றான திரிவிக்கிரமன் திருவீதித் திருமதிள் மிகவும் பாழ்பட்டு சரிந்துவிழ, அதனைச் சீர்படுத்திக் கட்டுவிக்கத் தொடங்கிய வீரசுந்தர பிரஹ்மராயன் எனும் சிற்றரசன் அந்த மதிளின் நேர்மைக்கு மாறாகப் பிள்ளைப்பிள்ளையாழ்வானுடைய திருமாளிகை குறுக்கிட்டு இருப்பது
 கண்டு முன்போலே மதிளை ஒதுக்கிக் கட்டாமல் அவர் திருமாளிகையை இடித்து நேரொழுங்காகத் திருமதிள்கட்டுவிக்க முயன்றான். அப்படிச்செய்வது சரியன்று என்று
 பட்டர் தடுத்ததையும் கேளாமல், பிள்ளைப்பிள்ளையாழ்வானுடைய திருமாளிகையை இடித்துக் கட்டுவித்தான்.
இதனால் பட்டருக்கும், அவ்வரசனுக்கும் உண்டான மனஸ்தாபம் நாளடைவில் அதிகரிக்க, அவனுடைய உபத்திரவம் பொறுக்காமல், பட்டர் திருக்கோஷ்டியூருக்கு எழுந்தருளினார்.  பெரியபெருமாளை பிரிந்ததினால் ஏற்ப்பட்ட துக்கத்தைத் தணிப்பதற்காக பட்டரை அவருடைய சிஷ்யரான "நஞ்ஜீயர்" கோதை ஆண்டாளை ஒரு ச்லோகத்தாலும், ஆழ்வார்களை ஒரு ச்லோகத்தாலும் துதிக்கவேணும் என்று வேண்டினார். பட்டரும் 'நீளா துங்க' என்ற இந்த ச்லோகத்தால் ஆண்டாளையும், 'பூதம் ஸரஸ்ய' என்ற ச்லோகத்தால் ஆழ்வார்களையும் துதித்தருளினார். நீளாதுங்க ஸ்லோகத்தில் திருப்பாவையின் தாத்பர்யத்தை சுருக்கமாக அருளிச்செய்து கொண்டு ஆண்டாளைச் சரணமடைகிறார். நீளாதேவீம் சரணமஹம் ப்ரபத்யே ( நீளாதேவியைச் சரணமடைகிறேன்) என்று வேதத்தில் கூறப்பட்டுள்ளது. இவர் அந்த நீளாதேவியையும், அவளது நாயகனான திருமாலையும் துயிலுணர்த்திய கோதையைச் சரணமடைகிறார்.

• ஸ்ரீமந் நாராயணன் பரமபதத்தில் ஸ்ரீதேவி பூதேவி, நீளாதேவி சகிதராய் திருமாமணி மண்டபத்தில் ஆதிசேஷ பர்யங்கத்தில் (மெத்தையில்) எழுந்தருளி இந்த உலகை ரட்சித்துக் கொண்டிருக்-கிறார் அல்லவா? அதில் நீளாதேவியானவள் , எம்பெருமான் சேதனர்களை உஜ்ஜீவிக்க கிருஷ்ண அவதாரமெடுத்தபோது, இவளும் யசோதைப்பிராட்டியின் சகோதரரான கும்பர் மகளாக அவதரிக்கிறாள்.
"விஷ்ணோர் தேஹாநுரூபாம் வை கரோத்யேஷாssத்மநஸ்தநும்" (விஷ்ணுவினுடைய தேகத்திற்குத் தகுந்ததாக இவளும் தன்னுடைய தேகத்தை ஆக்கிக்கொள்கிறாள்.) என்கிறபடியே அவன் ஆயர் கொழுந்தாக தோன்றியபோது இவளும் குலவாயர் கொழுந்தாக அவதரித்தாள்.
நப்பின்னைப்பிராட்டியாகிய நீளாதேவியின் ஓங்கிப் பணைத்திருந்துள்ள திருமுலைத்தடங்களாகிய மலைத்தாழ்வரையிலே உறங்குகிற ஸ்ரீகிருஷ்ணராகிற ('யசோதை இளஞ்சிங்கம்') ஸிம்ஹத்தை பற்றி  "பஹு குடும்பியாயிருப்பார் சிலர் ஒரு மலையடிவாரத்தைப்பற்றி ஜீவிக்குமாப்போலே ஸர்வலோக குடும்பியான ஸர்வேச்வரன் இவள் முலையடியைப் பற்றிக் கிடக்கிறான்"  என்று பிள்ளைலோகம் ஜீயர் அருளிச்செய்தார்.
மலராள் தனத்துள்ளான் என்று பெரியபிராட்டியாரின் ஸ்தனத்தையும்,  'தென்னனுயர் பொருப்பும் தெய்வ வடமலையும் என்னுமிவையே முலையா வடிவமைந்த அன்ன நடைய அணங்கு' எனப்பட்ட பூமிப்பிராட்டியின் ஸ்தனத்தையும் இகழ்ந்து,  ஆயர்மடமகளான நப்பின்னைப்பிராட்டியின் திருமுலைத்தடங்களிலே, பொற்குப்பியின் நுனியிலே கருமாணிக்கத்தைப் பதித்தாற்போலவும், அன்றலர்ந்த தாமரையில் வண்டு படிந்தாற் போலவும், அழுந்திக்கிடந்ததை 'நீளாதுங்க ஸ்தனகிரீ தடி' என்கிறார்.

'நீளாதுங்க ஸ்தனகிரிதடி ஸுப்தம்' என்னும் முதல் வாக்யம் "மாரிமலை முழைஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும்" என்னும்  23-வது பாடலின் கருத்தையும், "கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல் வைத்துக் கிடந்த மலர்மார்பா" என்னும் 19-வது பாடலின் கருத்தையும் பின்பற்றுகிறது. ஆச்ருதர்களுடைய, வளர்ந்து, பருத்து, உயர்ந்து, நிமிர்ந்து நிற்கும் 'பக்தியே மலர் போன்ற முலையாக' இங்கே உத்ப்ரேக்ஷிக்கப் பெறுகிறது.  பகவான் ஒருவனே தனக்கு சேஷியென்றும், தன்னைச் சேஷனாகவும், நன்கறிந்து பக்தியிலீடுபட்டு வர்த்திக்கும் ஸாதுக்களான ஆச்ருதர்களைப் பெண்களாகவும், பெண்களின் அங்கங்களிலெல்லாம் 'உத்தம அங்கமாகிய ஸ்தனமே' இந்த ஆச்ருதர்களின் பக்திப்பெருக்கின் அதிசயம் ஆகும்.
அத்யாபயந்தீயென்று இந்த ச்லோகத்தில் பேசுகிறார். அவனையெழுப்பத் தனக்கு அவனிடத்தில் ஒரு பாத்யமுண்டாகும்படி பூமிப்பிராட்டியாகிய தன்னுடைய திருமேனியில் சூடியதனால் பலமடங்கு மணம் அதிகப் பட்ட மாலைகளை அவன் சூடும்படி செய்து, அதனால் அவனைத் தன்னிடத்தில் ப்ரேமையுள்ளவனாக ஆக்கிக் கொண்டாள் என்றும், (கிருஷ்ணராகிற யானையை தனது சூடிக்களைந்த மாலையாகிற சங்கிலியாலே பிணைத்து, ஸ்தனங்களாகிற கட்டுத்தறியிலே கட்டினாள் - ஸ்வோர்ச்சிஷ்டாயாம் ஸ்ரஜி நிகளிதம்)
அவ்விதம் ப்ரேமபூதனாக இருக்கும் சரண்யனுடைய சகலகுண வைபவங்களையும் இவள் நிர்ப்பந்தித்து அனுபவித்தாள் என்றும், இவளுக்கு வந்த துணிச்சலுக்குக் காரணம் காட்டுகிறார். அந்தக் கோதையை இதம் இதம் என்று இரண்டுதரமும், பூய ஏவாஸ்து பூய: என்று இன்னும் இரண்டுதரமுமாக நாலுதரம் சேவித்துக் கைகூப்பி நிற்கிறார் பட்டர்.

• ஸ்ரீ உய்யக்கொண்டார் அருளிச்செய்தது

அன்ன வயற்புதுவை ஆண்டாள் அரங்கற்குப்
பன்னு திருப்பாவைப் பல்பதியம்  -இன்னிசையால்
பாடிக் கொடுத்தாள்நற் பாமாலை; பூமாலை
சூடிக் கொடுத்தாளைச் சொல்லு

(அன்னங்கள் உலவுகின்ற வயல்களை உடைய ஸ்ரீவில்லிபுத்தூரில் அவதரித்த ஆண்டாள். அரங்கனுக்கு பல (முப்பது) பாசுரங்களை ஆராய்ந்தருளிய திருப்பாவையை இனிய இசையோடு கூட்டி நல்ல பாமாலையாக (பாட்டுக்கலான மாலையாக), பாடிக் கொடுத்தவளும், பூக்களாலான மாலையைத், தான் சூடிக் களைந்து கொடுத்தவளுமான ஆண்டாளின் புகழைச் சொல்லு!)

சூடிக் கொடுத்த சுடர்க் கொடியே தொல்பாவை
பாடியருள வல்ல பல்வளையாய்! – நாடி நீ
வேங்டவற்கு என்னை விதியென்ற இம்மாற்றம்
நாம்கடவா வண்ணமே நல்கு.

  (பூமாலையை சூடிக்கொடுத்த சுடர்கொடியே! பழமையான பாவை நோன்பை (திருப்பாவை மூலமாக) பாடி எல்லோருக்கும் அருளவல்ல பல வளையல்களை அணிந்திருப்பவளே. நீ மன்மதனை நாடி “காமதேவா திருவேங்கட பெருமானுக்கு வாழ்க்கைப்படுத்தவேணும்” என்று (காமனைக் குறித்து) சொன்ன இவ்வார்த்தையை, நாங்களும் தப்பாமல் பின்பற்றும்படி அருள் புரிவாயாக. (* …வேங்கடவற் கென்ன விதிக்கிற்றியே., நாச்சியார் திருமொழி 504 (1:1) )




         *திருப்பாவை*

||: கோதையின் கீதை (கோதோபநிஷத்) - முதல் பாசுரம் :||

• எட்டடி நாற்சீரொருவிகற்பக் கொச்சகக் கலிப்பா
(பிலஹரி ராகம் - அட தாளம்)

மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்,
    நீராடப் போதுவீர்! போதுமினோ நேரிழையீர்!
    சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்!
    கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
    ஏரார்ந்த கண்ணி யசோதை யிளஞ்சிங்கம்,
    கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான்,
    நாராயணனே நமக்கே பறைதருவான்,
    பாரோர் புகழப் படிந்தேலோ ரெம்பாவாய்.


[பொருள்:- அழகிய ஆபரணங்களை அணிந்த கன்னிப் பெண்களே! வளமும் சிறப்பும் மிக்க ஆயர்பாடியில் உள்ள செல்வச் சிறுமியரே! மாதங்களில் சிறந்த மார்கழி மாதத்தில், முழு நிலவு வீசும் பௌர்ணமி நன்னாளில், பாவை நோன்பில் கலந்து கொண்டு நீராட விரும்புகின்றவர்கள், வாருங்கள், போகலாம்!
கூர்மையான வேலைக் கொண்டு பகைவர்க்கு கொடுமை செய்பவனாகிய நந்தகோபனுடைய குமாரனும், அழகிய விரிந்த விழிகளை உடைய யசோதைக்கு இளம் சிங்கக்குட்டி போன்றவனும், கரிய வண்ண மேனியனும், செந்தாமரை போன்ற கண்களையும், சூரியனைப்போல பிரகாசமாயும் நிலவைப்போல குளிர்ந்ததாயும் உள்ள திருமுகத்தையும், உடையவனும், ஆன நாராயணன், நம் நோன்புக்கு வேண்டிய பொருட்களையும், நாம் விரும்பிய வரங்களையும் தந்து அருள் புரிவான். எனவே உலகத்தார் நம்மை போற்றும் வண்ணம், நோன்பிருந்து அவன் திருவடி பணிவோம், வாருங்கள்!"]


இந்தப் பாசுரத்தின் தொடக்கத்தில் காலத்தையும் இடத்தையும் நிர்ணயிக்கிறாள். ஒவ்வொரு வருஷமும் அனுஷ்டிக்கவேண்டிய நோன்பாதலால் 'மார்கழித்திங்கள்' என்று மாதத்தை மட்டில் குறிப்பிட்டாள். இப்பிரபந்தம் 30 பாசுரங்களில் சொல்லப்போகிற 'ப்ராப்ய, ப்ராபகங்கள்' இந்த முதல் பாசுரத்தில் சுருக்கமாக சொல்லப்படுகின்றன. 'மார்கழி திங்கள்' முதல் 'சிறுமீர்காள்' என்பது வரையில்  ப்ராப்யம் சொல்லப்பட்டுள்ளது. பகவத் ஸம்பந்தமுண்டான காலமும், பாகவதர்களும் ப்ராப்யகோடியில் சேருகின்றனர். 'கூர்வேல் கொடுந்தொழிலன்' என்று தொடங்கி இவர்களுக்கு உபாயம் நாராயணனே என்று கூறப்படுகிறது. அர்ஜுநன் நெடுநேரம் 'கீதோபநிஷத்' பதினெட்டு அத்தியாயங்களையும் கேட்டு  கடைசியில் சரமச்லோகம் மூலம் கண்ணனால் உபாயத்தை அறிந்துகொண்டான். ஆனால் ஆண்டாள் தனது 'கோதோபநிஷத்' முதற்பாசுரத்தின் மூலம் ப்ராப்யத்தையும், ப்ராபகத்தையும் தானே வெளியிடுகிறாள்.
மேலும் திருப்பாவை முதற்பாசுரத்தில் ப்ராபகம் சொல்லப்படுகிறது. கடைசியில் 'உனக்கே நாம் ஆட்செய்வோம்' என்று ப்ராப்யம் சொல்லப்படுகிறது. நடுவேயுள்ள 28 பாடல்கள் "தேஹயாத்திரைக்கு உடலாக்கி விடுகிறாள்" என்று கூறுவர்.

[ப்ராபகம் ப்ராப்யம் அவனே.]
முதல் பாசுரம் ஒரு பிரபந்தத்தின் தலையாய கருத்தை நமக்கு அளிப்பதாக நம் பூர்வர்ககள் சித்தாந்தம். மார்கழித் திங்கள் திருப்பாவையில் முக்கிய செய்தியான, அவனை அடைவதற்கு வழி அவனே என்பதை தெரிவிக்கிறது. இதை முதல் பாசுரமான மார்கழித் திங்களில் காணலாம்.

“மார்கழித் திங்கள்” முதல் “செல்வச் சிறுமீர்காள்” ஈறாக அவனை அடையும் மார்க்கமும், “நாராயணனே நமக்கே பறை தருவான்” என்பது அடையப்படும் அந்த அலாதியான அருமையான ப்ராப்யத்தை சொல்லுகிறது. பறை- விரதத்திற்கு (விரதம்- பாவை நோன்பு ) ஏற்ற இசைக்கருவி என்ற பொருளில் வருவது, ஆயினும் அதன் மறைபொருள்  வீடுபேறு (அ) கைங்கர்யம் ஆகும்.
அவனை அடைவதற்கு ஆர்வமும் இச்சையுமே அமையும். அவனே நமக்குப் பறை தருவான் என்பது இதன் சுருக்கமான கருத்தாகும். இதற்கு ஒரு நல்ல காலம் வாய்த்ததே என்று காலத்தையும் கொண்டாடுகிறார்கள்.
ஒருவனுக்கு ஒரு உயர்ந்த பொருள் கிடைத்தால், அப்பொருளைக் காட்டிலும் கிடைத்த காலத்தைக் கொண்டாடுவது வழக்கம். "சைத்ர : ஸ்ரீமாநயம் மாஸ :" என்று ராம பட்டாபிஷேகத்திற்கமைந்த நாளைக் கொண்டாடினார்களிரே! அவ்விதமே ஆயர் பெண்களும் தங்கள் நோன்புக்கு அமைந்த காலத்தைக் கொண்டாடி அடையப்படவேண்டிய பொருள் இது. அதை அடைவதற்கு ஸாதனமிது. என்பதை முதல் பாட்டாலே நிர்ணயிக்கிறார்கள். கண்ணன் பகவத் கீதையில் "நான் மாதங்களில் மார்கழி மாதம்" என்றான். "அயம் ஸ கால: ஸம்ப்ராப்த : ப்ரியோ யஸ் தே ப்ரியம்வத" என்று, இளைய பெருமாளான லட்சுமணனும் ராமனுக்குப் பிடித்தமான மார்கழி மாத காலமென்றார். வ்யூஹமூர்த்திகளில் முதல்வனான கேசவனைத் தேவதையாகக் கொண்ட மாதமிது. 
அதிகக் குளிரும் அதிக தாபமும் இல்லாத மாதம்.

(மார்கழி திங்கள்)  கிருஷ்ணனோடே தங்களைக் கூட்டின காலத்தைக் கொண்டாடுகிறார்கள். மழை விழுந்து ஹ்ருதயம் குளிரும் காலம்.
வாஸூதேவதருச்சாயா நாதி ஸீதா ந கர்மதா ( வாஸுதேவனாகிற மரத்தின் நிழல் அதிக குளிரும், அதிக உஷ்ணமுமற்றது.) என்கிறபடியே அதிக குளிரும் அதிக உஷ்ணமுமற்ற மாதம்.
நாளுக்கு ப்ராம்ஹ முகூர்த்தம் போலே ஒரு வருஷத்திற்கு இந்த மார்கழி மாஸமாகுகை.
ஸத்வம் தலையெடுக்கும் காலம். மாதங்களுக்குள் நானே மார்கழி மாதமாகிறேன் என்று அவனே கீதோபநிஷத்தில் அருளிச்செய்ததாலே மாதங்களுக்குள் வைஷ்ணவமான மாதம்.

(மதிநிறைந்த) கிருஷ்ணானுபவம் பெறாத நாளிலே இருளை விரும்புமவள். இப்போது அவ்வனுபவம் கிடைக்கப் விருக்கிறதாலேயே மதிநிறைந்த நாளைக் கொண்டாடுகிறாள். நாயகனுடன் கூடப்பெறாதவர்களன்றோ சந்திரனை வெறுப்பர்கள். நாயகனை அடையப்போகிறவர்களாகையால் சந்திரனைக் கொண்டாடுகிறார்கள்.
அஞ்சு லட்சம் இடைப்பெண்களின் முகச்சந்திரனெல்லாம் பூர்ணமாயிருக்கும் நன்னாளன்றோ? என்கிறார். "திங்கள் திருமுகத்து சேயிழையார்" (திருப்பாவை - 30) என்றல்லவோ அருளினாள்.

(நன்னாளால்) இதற்கு முன் சென்ற நாட்களெல்லாம் தீய நாட்கள். பகவத் ஸம்பந்தம் ஏற்பட்ட நாள் நன்னாளாகும்.

(நீராட) கிருஷ்ணனைப் பிரிந்ததினால் குளிர்காலமாயிற்று. ஆழ்வார்களும் எம்பெருமானையே தடாகமாக அனுபவித்தனர்.


(போதுவீர் போதுமினோ)
அல்ப பலமான ஸ்வர்க்கம் முதலியவைகளை அடைய மிகுந்த முயற்சிகள் செய்யவேண்டும். அநந்த பலமான இதற்கு அவற்றைக் காட்டிலும் அதிக முயற்சிகள் செய்யவேண்டியிருக்குமோ? என்னில் வரவிருப்பமுள்ளவர்கள் வரலாம். இவ்விஷயத்தில் இச்சைக்கு மேற்படச்செய்ய ஒன்றுமில்லை. கூடும் மனமுடையீர் கூடுமினோ
(திருப்பல்லாண்டு பாடல் - 4) என்று தனது தகப்பனார் பாசுரத்தை நினைத்துக் கொண்டாள். மற்ற விஷயங்கள் சொரூபத்திற்கு தகாதவையாகையால் அவைகளைப் பெறுகைக்கு கடுமையான விதிகளையும், இவ்விஷயம் சொரூபத்திற்கு தக்கதாகையால் இச்சையே போதுமானதென்று விதித்தருளினான் பரம கருணையுடையவனான ஸர்வேச்வரன். தாய்தந்தைக்குக் கைஙங்கர்யம் செய்வதற்கு இச்சைக்கு மேற்பட ஒரு அதிகாரம் வேண்டுமோ? நமக்கு தாயாகவும் தந்தையாகவும் மற்றெல்லாமாகவும் இருப்பவனன்றோ மாதவன். [தேந சேத விவாதஸ்தே மா கங்காம் மா குரூந் கம] அந்த ஸர்வேச்வரனிடத்தில் அத்வேஷமிருந்ததாகில் , புண்ணிய தீர்த்த ஸ்நாநம், புண்யக்ஷேத்திராடனம் ஆகிய ஸாதநாந்தரங்களில் கை வைக்க வேண்டாம் என்கிறது மனு ஸ்ம்ருதி.

 (நேரிழையீர்) கிருஷ்ணன் எப்போது வருவானென்று அறியாமையாலே  அவன் வரவை எதிர்பார்த்து, எப்போதும் ஆபரணங்களை அணிந்திருப்பார்கள் என்றும், முன்பே கிருஷ்ணனுடன்  கூடியிருந்ததால் உருவான  அழகெனும் ஆபரணத்தை அணிந்தவர்கள் என்றும் பூர்வாச்சார்யர்கள் கருதுவர். அவனே உபாயம் என்ற நினைவையே பூஷணமாக [அணிகலன்] கொண்டவர்கள் என்றும் ஓர் கருத்துண்டு.


(சீர்மல்கும் ஆய்பாடி ) பரமபதத்திலும் சென்று  பெருகும்படியான ஐஸ்வர்யத்தையுடைய ஆய்ப்பாடி, பகவத்குணங்கள் வெள்ளமிடும் ஆய்ப்பாடி, பரமபதம் போலவே வேறொரு தேஹமெடுத்துச் சென்று  அனுபவிக்க வேண்டாதபடி இங்கேயே கிருஷ்ணானுபவம் பண்ணத்தக்க ஊர். அநாச்சாரம் நிறைந்தவர்களும், இடக்கையும், வலக்கையும் அறியாதவர்களான இடையர்கள் இருக்கும் ஊர்.

(செல்வச்சிறுமீர்காள்) இவ்வாத்மாவிற்கு நிலைநின்ற ஐஸ்வர்யமாகிற பகவத்ஸம்பந்தம் இங்கு செல்வம் எனப்படுகிறது.
லட்சுமணன், விபிஷணாழ்வான், கஜேந்திராழ்வான் போலவே முறையே கைங்கர்யலட்சுமியை பெற்றவர்களாயும், அந்யசேஷத்வமற்றவர்களாயும், ஸ்வ ஸ்வாதந்தர்யமற்றவர்களாயும், இருப்பதால் இவர்களைச் செல்வச்சிறுமீர்காள் என்று அழைக்கிறார்கள்.

(கூர்வேல் கொடுந்தொழிலன்) ஸ்ரீநந்தகோபர் முன்பு புல், பூண்டுகளைக்கூட மிதிக்கமாட்டார். பிள்ளைகள் பிறந்த பிறகு , அவர்கள் மேலுண்டான அன்பின் மிகுதியாலே, அவர்களுக்கு என்ன வருகிறதோ? என்றஞ்சி வேலைக் கூராக்கி வைத்துக் கொண்டு கண்ணை இமை காப்பது போல காத்து வருகிறார். தொட்டிலுக்குக் கீழே ஒரு சிற்றெறும்பு புகுந்தாலும் சிங்கத்தின் மேலே விழுமாப்போலே விழுந்து கொல்லுமவரானார்.  ஜீவஹிம்சை சாஸ்திர விரோதமன்றோ? அக்னீஷோமம் பண்ணுவதற்கு பசுவைக் கொல்லுவது போல எம்பெருமானுக்கு என்ன தீங்கு வருகிறதோ?  என்று அஞ்சிச் செய்யும் ஹிம்சை தர்மமே ஆகும்.


(நந்தகோபன்) "அம்பரமே, தண்ணீரே, சோறே, அறஞ்செய்யும்" [திருப்பாவையின் 17வது பாசுரம்] என்கிறபடியே எல்லோர்க்கும் தாரக, போஷக, போக்கியங்களைத் தருபவன் நமக்கு தாரானோ? என்கிறாள்.

( நந்தகோபன் குமரன்) "வெண்ணெய்  களவு கண்டான், பெண்களைத் தீம்பு செய்தான்" என்று எல்லாரும் வந்து முறையிடுவதைக் கேட்ட நந்தகோபர்,  'என் முன்னே அவன் வரட்டும் கடுமையாகத் தண்டிக்கிறேன்' என்பர். அவர் முன்னே கண்ணன் தோன்றும் போது ஐயோ! இவனையா குற்றம் சொன்னார்கள் என்று அவர்களையே கோபிப்பாராம்.


(ஏரார்ந்த கண்ணி யசோதை) ஸதாபச்யந்தி என்று பரமபதத்தில் ஸதாதர்சனம் பண்ணும் நித்யஸூரிகளைப் போலவே, பிள்ளையைக் கண்கொட்டாமல் கண்டு கொண்டிருப்பவளாதலால், அழகு நிரம்பிய கண்ணையுடையவள் எனப்படுகிறாள். தகப்பனாராகிற நந்தகோபர் வேல் கொண்டு கண்ணனை ரட்சிக்கிறார். தாயான யசோதை முகத்திலே அம்பு இரண்டு கொண்டு காவலிடுகிறாள்.

 (இளஞ்சிங்கம்) அவனுக்கு குமரன், இவளுக்கு இளஞ்சிங்கம்.  நந்தகோபர் முன்பு மிக்க அடக்கத்துடனிருக்குமவன், இவளிடம் மிகுந்த செருக்குடனிருக்கிறபடியால் இனஞ்சிங்கம் எனப்பட்டான். உபாயமான ஸர்வேச்வரனைப் புருஷகாரத்தை முன்னிட்டே பற்ற வேண்டுமாகையால்,  புருஷகாரபூதர்களாக ஸ்ரீநந்தகோபரையும், யசோதைப்பிராட்டியையும் அநுசந்திக்கிறார்கள். நந்தகோபரை ஆச்சார்யராகவும், யசோதையை திருமந்திரமாகவும் கூறுகிறது ஸ்வாபதேச வ்யாக்யானம்.

(கார்மேனி) தாய்தந்தையர் ஒளித்து  வைத்தாலும் களவு கண்டாவது அனுபவிக்கவேண்டிய திருமேனி. மேகம் போலே ஒரு ப்ரதி ப்ரயோஜனத்தை எதிர்பாராமல் தன்னை உபகரிக்கும் திருமேனி. இவர்கள் நீராடப்போகிற தடாகம் போன்ற திருமேனி.

(செங்கண்)  "தஸ்ய யதா கப்யாஸம் புண்டரீக மேவ மக்ஷிணி" ( சூர்யனால் மலர்ந்த தாமரை எப்படி விளங்குமோ அப்படிப்பட்ட இருகண்கள் உடையவன்) என்றும், "செந்தாமரைத்தடங்கண்" என்றும் சொல்லப்பட்ட திருக்கண்களை அனுபவிக்கிறாள். தடாகம் போன்ற திருமேனியில் தாமரை பூத்தாற்போலே கார்மேனிச் செங்கண் என்கிறாள்.

(கதிர்மதியம் போல் முகத்தான்) விரோதிகளுக்கு சூர்யனைப்போ அணுகவொண்ணாததாகவும், அடியார்களுக்கு கிட்ட நின்று அனுபவிக்கலாம்படியிருக்கும் திருமுகத்தையுடையவன் அடியார்களுக்கு புனலுருவும், விரோதிகளுக்கு அனலுருவாகவும் உள்ளதால் கதிர்மதியம் போல் முகத்தையுடையவனாகிறான்.


( நாராயணனே நமக்கே பறை தருவான்) கிருஷ்ணனை இவர்கள் நாராயணனென்று அறிந்ததெப்படி? அதிமானுஷ்ய கார்யங்களாலே இவனே ஸர்வேச்வரனென்று பெண்களுமறிந்து கொள்ளலாம்படி இவன் அவதாரமிருக்கிறதால் ஆகும். நோன்புக்கு அங்கமாக ஆயர்கள் ஜபிக்கச் சொன்ன மந்திரத்தை அநுஸந்திக்கிறார்கள் எனக் கொள்ளலாம். வேதங்களாலும், வைதீகர்களாலும், ஆழ்வார்களாலும் பலமுறை அனுஸந்திக்கப்பட்ட திருநாமமாகையாலே,
இதை முதலில் அநுஸந்திக்கிறார்கள். உடையவனன்றோ உடைமையைப்பற்றி கவலைகொள்ளுவான். பறை என்று கைங்கர்யத்தை சொல்லுகிறார்கள். பிள்ளைகளுக்குச் சோறு போடாத தகப்பனுமுண்டோ? சரீரத்தை நோக்காத  சரீரியுமுண்டோ? என்கிறார்கள். நாம் ஸ்வாதந்த்ரமாக கைங்கர்யம் செய்யலாகாது. அவன் தரக் கொள்ளவேணும் என்று உணர்த்துகிறாள்.
பலவிதமான ஏற்றத்தைக் கொண்ட மார்கழி மாதத்தில் சந்திரன் நிறைந்த சுக்லபக்ஷத்தில் பகவத் ஜ்ஞான முண்டாகக் கூடிய நாளில் ஸகல விதமான ஸம்பத்தும் நிறைந்த ஆயர்பாடியில் அவதரித்து, பகவத் பக்தியாகிற செல்வம் நிரம்பப் பெற்று, எல்லா விதத்திலும் அணிகலன்கள் அணிந்தவர்களே! பகவானாகிற தடாகத்தில் நீராட விரும்புபவர்கள் யாவரும் செல்லலாம். ( அல்லது வரலாம் ).
புத்ர வாத்ஸல்யத்தால், யாரால் என்ன தீங்கு வருமோ என்று பயந்து கூரான வேலை எப்பொழுதும் கையில் தாங்கிப் பகவத் விரோதிகளை அழிக்கக் கூடிய நந்த கோபாலனுக்கு அடங்கினவனும், கண்ணனை எப்பொழுதும் கண் கொட்டாமல் அனுபவிப்பதால் அவ்வழகைக் கண்ணில் பெற்ற அம்பன்ன ரக்ஷை பண்ணுவதான கண்ணையுடையவளான யசோதையின் இளஞ்சிங்கமானவனும், நீர் கொண்ட மேகம் போன்ற நிறம் படைத்தவனும், சூரியனால் அப்பொழுது மலர்ந்த செந்தாமரை போன்ற கண்கள் படைத்தவனும், வேண்டாதவர்களுக்குச் சூரியன் போன்றதும், வேண்டியவர்களுக்குச் சந்திரன் போன்றதுமான முகம் படைத்தவனுமான திருமகள் கணவனாகிய நாராயணனே, வேறு கதியில்லாமல் அவன் திருவடிகளையே தஞ்சமாகப் பற்றின நமக்குப் பறை முதலிய யாவற்றையும் கொடுப்பான். எல்லோரும் புகழ்ந்து பயன் பெறும் படி அநவதாநமில்லாமல் மனத்தைச் செலுத்தி நீராடுவோமாக!

•¶ பாசுர விசேஷங்கள் |

• ஆண்டாள் முதல் ஐந்து பாசுரங்களில் ஸ்ரீமந்நாராயணனின், பர, வ்யூக, விபவ, அந்தர்யாமி, அர்ச்சை ஆகிய 5 நிலைகளைச் சொல்லி பாடியுள்ளாள்.  முதல் பாசுரத்தில் "நாராயணனே நமக்கே பறை தருவான்..." என்றதன் மூலம் திருமாலின் பரம் என்கிற முதல் நிலையினை ஆண்டாள் நமக்கு அறிவிக்கிறாள்.


• "நாராயணனே நமக்கே பறை தருவான்..." என்றதன் மூலம் கீதையில் சரமச்லோகமாக கடைசியில் கூறியதை ஆண்டாள் இந்த முதல் பாசுரத்திலேயே கூறிவிடுகிறாள்.
• சரமச்லோகம்
सर्वधर्मान्परित्यज्य मामेकं शरणं व्रज ।
अहं त्वां सर्वपापेभ्यो मोक्षयिष्यामि मा शुचः ॥१८- ६६॥
ஸர்வத⁴ர்மாந்பரித்யஜ்ய மாமேகம் ஸ²ரணம் வ்ரஜ |
அஹம் த்வாம் ஸர்வபாபேப்⁴யோ மோக்ஷயிஷ்யாமி மா ஸு²ச: || 18- 66||
[எல்லா தர்மங்களையும் அறவே தியாகம் செய்து விட்டு, என் ஒருவனையே சரணடைக. உன்னை நான் எல்லா பாபங்களிலிருந்தும் விடுவிப்பேன். கவலைப்படாதே.- பகவத் கீதை - அத்தியாயம் 18 - வசனம் 66]
• கர்ம/ஞான யோகங்களை விடவும், 'பக்தி யோகமே' பரமனின் அருளைப் பெறவும், அவனை அடையவும் சிறந்த மார்க்கமாக, திருப்பாவையின் இந்த முதல் பாசுரம் அறிவிக்கிறது.
• திருப்பாவையில் ஒவ்வொரு பாசுரத்திலும் திருப்பாவை ஜீயர் ராமாநுஜரைச் சிந்திக்க வேண்டிய சொற்றொடர்கள் உள்ளன.
|"மதி நிறைந்த நன்னாள்"|
பூர்ண சந்திரன் உள்ள நல்லநாள். மதி - ஞானம் நிறையப்போகிற நல்லநாள் என்பது உள்ளுறை பொருள்.


எம்பெருமானார் இராமாநுஜர் அவதரித்த நாள் இருள் தருமா ஞாலத்தவர்களுக்கு 'ஞானம்' நிறைவதற்கு ஹேதுவான நன்னாளன்றோ?
யதிராஜ ஸப்ததியில்  'அநபாய விஷ்ணுபத ஸம்ஸ்ரயம் பஜே'  என்ற ஸ்லோகத்தில் இராமாநுஜரை சந்திரனுக்கு ஒப்பாக கூறப்பட்டுள்ளது. 'யதிராஜ சந்திரன்' தோன்றியது மனிதர்களுக்கு முதல் மாதமான சித்திரை மாதம் ஆகும். மார்கழித்திங்களானது தேவர்களுக்கு முதல் மாதம் ஆகும். 








• திருப்பாவை 30 பாசுரங்கள்  இசை ஒலிநாடா வடிவில் ( பி.சுசீலாவின் இனிய குரலில்) MP3 Audio Songs Download link:- Internet Archive
https://archive.org/details/ThirupavaiPt.1P.Susheela

• திருப்பாவை வ்யாக்யானம் pdf ஆக படிக்க Download link  : 
https://archive.org/details/subburaji2009_gmail_201811

ஸ்ரீஆண்டாள் திருவடிகளே சரணம்! 
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்!!

தொடர்ச்சி  அடுத்த பதிவு - Post ல பார்ப்போம்.

                  அன்புடன்

       ஸ்ரீ பா ல சு பி க் ஷ ம்
E.P.I. இராம சுப்பிரமணியன் 


Comments

  1. ••நாச்சியார் திருமொழி தனியன்கள்

    • திருக் கண்ண மங்கை யாண்டான் அருளிச்செய்தது.

    அல்லிநாள் தாமரை மேலாரணங்கனின் துணைவி
    மல்லிநாடாண்ட மடமயில் --மெல்லியலாள்
    ஆயர்குல வேந்தனாகத்தாள் தென்புதுவை
    வேயர் பயந்த விளக்கு

    • முதல் வானமா மலை ஜீயர் ஸ்வாமி அருளிச்செய்தது

    கோலச் சுரிசங்கை மாயன் செவ்வாயின் குணம் வினவும்
    சீலத்தனள் , தென் திருமல்லி நாடி செங்குழல் மேல்
    மாலைத் தொடை தென்னரங்கருக்கு ஈயும் மதிப்புடைய
    சோலைக்கிளி, அவள் தூய நற்பாதம் துணை நமக்கே.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

சிறுதெய்வங்களோடு வந்த பெருந்தெய்வங்கள் (பகுதி-1)

காலந்தோறும் மதுரை (பகுதி − 1)

கோதையின் கீதை (பகுதி - 33)