கோதையின் கீதை (பகுதி - 32)



 🔷🔶  மார்கழி நீராட்ட உற்ஸவம்  🔷🔶

🔶 இவ்வுற்சவம் தொடங்குவதற்கு முந்தைய நாள் இரவு ஶ்ரீஆண்டாள் சர்வாலங்கார பூஷிதையாக வடபெருங்கோயிலுக்கு எழுந்தருளி வடபத்ரசாயியிடம் மார்கழி நோன்பு நோற்க, அனுமதிகேட்கும் "பிரியாவிடை" நடைபெறுகிறது. ஶ்ரீஆண்டாள், வடபத்ரசயனர் பெரியபெருமாள் சந்நிதியின் மஹாமண்டபத்திற்கு எழுந்தருளி, ஏகாந்த திருமஞ்சனம் கண்டருள்வார். பின்னர் குடை,சாமரங்களுடன், புஷ்பமாரி பொழிய ஸ்வஸ்திவாசனம் கோஷிக்க கைத்தல சேவையாக மூலஸ்தானம் எழுந்தருளுகிறாள்.  ஆண்டாளுக்கும்,வடபெருங்கோயிலுடையானுக்கும் திருவாராதனம், வேதவிண்ணப்பம் நடைபெறும். பின்னர் திருக்கதவம் தாளிடப்படும். அப்போது ஶ்ரீஆண்டாள் மார்கழி நீராட்டத்திற்கு எம்பெருமானிடம் அனுமதி கேட்பதாக ஐதீகம். பின்னர் திருக்கதவம் நீக்க, அரையருக்கு அருளப்பாடு சாதிக்க, அவரும் திருப்பாவை முப்பது பாசுரங்களையும் அமுததொழுக, தாளத்தோடு சேவித்து, முதல்பாட்டுக்கு வியாக்யானம் செய்வார். பின்னர் ஸ்தலத்தார் உற்சவ வைபவம் மற்றும் பஞ்சாங்கம் வாசிப்பர். ஆண்டாள் அங்கிருந்து புறப்பட்டு, பெரியாழ்வார் மங்களாசாசனம் முடிந்து நாச்சியார் திருமாளிகையை அடைவார்.





(நீராடல் உற்ஸவத்தின் ஒவ்வொரு நாளும் தங்கப் பல்லக்கில் வட பெருங்கோவிலின் ராஜகோபுர வாசலில் ஸ்ரீ ஆண்டாள் எழுந்தருள, நாள்பாட்டு’ வைபவம் நடைபெறும்.  அதாவது, ஒவ்வொரு நாளும் அந்த நாளுக்கான திருப்பாவைப் பாடல் பாடப்படுவதே இந்த நிகழ்ச்சி.)





மறுநாள் காலையில், ஶ்ரீஆண்டாள் தங்கப்பல்லக்கிலே எழுந்தருளி பெரியகோபுர வாசலை அடைகிறாள். அன்று
நாட்பாட்டு ‘மாலே மணிவண்ணா’ பாசுரத்தை ஸ்ரீ ஆண்டாளே சொல்வதாக ஐதீகம். இந்தப் பாடல், "ஆலின் இலை யாய் அருளேலோ எம்பாவாய்" என்று முடிவுறும்.
சமஸ்கிருதத்தில் ‘வட விருட்சம்’ என்றால் ஆலமரம் என்றும், ‘பத்ரம்’ என்றால் இலை என்றும் பொருள் ஆகும். ‘வடபத்ரசாயி’ என்பதையே, ‘ஆலின் இலையாய்’ என்று அழகுத் தமிழில் ஆண்டாள் கூறுகிறாள். அரையர் நாள் பாசுரம் சேவித்த பிறகு, அங்கிருந்து புறப்பட்டு பல விடையாத்து மண்டபங்களை முடித்துக்கொண்டு திருமுக்குளக்கரையில் உள்ள எண்ணெய் காப்பு மண்டபம் எழுந்தருளுகிறாள். இவ்வாறு பல்லக்கிலே எழுந்தருளும் போது ஶ்ரீஆண்டாள் தினமும் ஒரு திருக்காலத்துடன் விளங்குவார்.

ஸ்ரீ ஆண்டாள் நீராடல் உற்சவத்தின்
2ஆம் நாள் கள்ளழகர் திருக்கோலம்.
3ஆம் நாள் கண்ணன் கோலம்,
4ஆம் நாள் முத்தங்கி சேவை,
5ஆம் நாள் பெரியபெரு மாள் கோலம்,
6ஆம் நாள் மஹாராணியாக அமர்ந்த கோலம்,
 7ஆம் நாள் தங்க கவச சேவை என தரிசனம் தருவது சிறப்பு.



திருமுக்குளம் கரையில் உள்ள நீராட்ட மண்டபத் தில், மாலை 3 மணிக்கு ஆண்டாளுக்கு ‘எண்ணெய் காப்பு’ வைபவம் நடை பெறும்.
அழகான தோற்றத்துடன் சௌரிக் கொண்டையுடனும், சர்வ ஆபரணங்களுடனும், ஶ்ரீஆண்டாள் அமர்ந்தபடி இருக்க அர்ச்சகர்களும், பரிசாரகர்களும் இணைந்து அனைத்து உபசாரங்களுடன் எண்ணெய் காப்பு சாற்றுதல் என்னும் வைபவத்தை தொடங்குகிறார்கள். முதலில் ஶ்ரீஆண்டாளின் திருவடிகளை விளக்கி, கைகளை விளக்கி அர்க்யம், பாத்யம் முதலியவைகளை சமர்ப்பிக்கிறார்கள். பின்பு ஶ்ரீஆண்டாளின் தலையலங்காரமாக உள்ள சூரிய-சந்திரன், நெற்றிச்சரம், துராய் இழுப்புச்சங்கிலி, தங்க மல்லிகை மொட்டு, தங்க கமலம், ரத்ன ராக்கொடி,  ரத்னஜடை, முதலான தலையணிகளையும், காசு மாலை, பவளமாலை, வைரப்பதக்க மாலை முதலிய ஆபரணங்களையும் படிகளைந்து, பின் ஶ்ரீகோதையின் சௌரிக் கொண்டையை அவிழ்த்துக் கோதி விட்டு சிடுக்கு நீக்கி, சீப்பினால் தலைவாரி, மூலிகைகளால் காய்ச்சப்பட்ட தைலத்தை சாற்றுகிறார்கள். இவ்வாறு மூன்று முறை செய்யப்படுகிறது. ஒரு மஹாராணிக்கு செய்யும் சகல உபசாரங்களும் நம்  அன்னை ஶ்ரீகோதை ஆண்டாளுக்கு செய்கிறார்கள். (பக்தர்களுக்கு தைலம் ப்ரசாதமாக வழங்கப்படுகிறது.) பின்னர் பத்தி உலாத்தல் முடிந்து திருமஞ்சன குறட்டிற்கு எழுந்தருளுகிறாள். அங்கு நவகலசத்தினால், வேதகோஷங்கள், முழங்க, வாத்ய கோஷங்களுடன் ஶ்ரீஆண்டாளுக்கு திருமஞ்சனம் செய்யப்படுகிறது. பிரபல நாடகக் கலைஞரான கன்னையா நாயுடு அவர்களால் சமர்பிக்கப்பட்ட தங்கக் குடம் இதில் பிரதான கலசமாகும். பின்னர் தினம் ஒரு வாகனத்தில் சௌரிக் கொண்டையுடன் திருவீதி வலம் வந்து வடபெருங்கோயிலை அடைகிறாள். அங்கு நாள் பாட்டு நடைபெறும்.
அந்த உற்சவத்தின் ஆறு மற்றும் எட்டாம் நாட்களில் நடக்கும் சவுரித் திருமஞ்சனம் விசேஷமானது.
அப்போது ஒரு நாள், மூக்குத்தி சேவை நடைபெறும். ஸ்ரீ ஆண்டாளின் மூக்கருகே, தங்க மூக்குத்தியைக் கொண்டு சென்றதும், அது தானாகவே ஆண்டாளின் மூக்குடன் ஒட்டிக் கொள்கிறது.
கவிச்சக்ரவர்த்தி கம்பர் ஒரு முறை ‘மார்கழி நீராடல்’ உற்சவத்தைக் காண ஸ்ரீவில்லிப்புத்தூருக்கு  வந்துள்ளார் என்பதையும், நீராடல் வைபவத்தைக் கம்பர் காண வேண்டும் என்பதற்காக, இந்த வைரமூக்குத்தியை வைத்து  ஸ்ரீஆண்டாள் நடத்திய திருவிளையாடல் பற்றி "கோதையின் கீதை" பதிவு- 8 லேயே  நாம் அறிந்தோமல்லவா?
தை மாதப்பிறப்பன்று, ஸ்வாமி மணவாளமாமுனிகளுக்காக எண்ணெய் காப்பு உற்சவத்தின் நிறைவுத்திருநாள் கொண்டாடப்படுகிறது. எண்ணெய்க்காப்பு, நீராட்டம் முடிந்து பல்லக்கிலே வடபெருங் கோயிலுக்கு ஶ்ரீஆண்டாள் எழுந்தருளி நாள்பாட்டு முடிந்தவுடன்
கவிச்சக்ரவர்த்தி கம்பர் சார்பாக "கம்பன் கொச்சு" என்னும் கம்பன் குஞ்சலம் சாற்றப்படுகிறது. பின்பு மணவாளமாமுனிகள் சந்நிதியை அடைகிறாள். மாமுனிகள் எழுந்தருளி வந்து ஶ்ரீஆண்டாளுக்கு மங்களாசாசனம் செய்கிறார்.




🔹🔸 "வங்கக்கடல் கடைந்த மாதவனை, கேசவனை..." திருப்பாவையின்  முப்பதாவது பாசுரம். திருப்பாவை சொல்லும் அடியார்கள் ஶ்ரீகண்ணபிரானின் ப்ரேமைக்கும், க்ருபைக்கும் பாத்திரமாகி, பரமாத்ம ஆனந்தம் அடைவர் என்ற 'பலஸ்ருதி ' பாசுரம் இது வாகும்.
 இப்பாடலில் தான் தன்னை யாரென்று "பட்டர்பிரான் கோதை" ஆண்டாள் அறிவிக்கிறாள். முதல் பாசுரத்திலும் "நாராயணனே நமக்கே பறை தருவான்" என்று நூற்பயனைச் சொல்லுகிறாள். அதற்கு இறைவனாம் கண்ணனின் கார்மேனி, கதிர்மதிய முகத்தை தியானிக்கச் சொல்லுகிறாள். இந்தக் கடைசி பாசுரத்திலும் " செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலை" எண்ணி தியானித்து வணங்கி சரணம் செய்பவர்கள், "எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர்" என்று நூற்பயன் சொல்லி முடிக்கிறாள்.



🔹🔸திருப்பாவை முப்பதாவது பாசுரம் 🔹🔸

வங்கக் கடல் கடைந்த மாதவனை கேசவனை
திங்கள் திருமுகத்து சேய் இழையார் சென்று இறைஞ்சி
அங்கப் பறை கொண்ட ஆற்றை  அணி புதுவைப்
பைங்கமலத் தண் தெரியல் பட்டர் பிரான் கோதை சொன்ன
சங்கத் தமிழ் மாலை முப்பதும் தப்பாமே
இங்கு இப்பரிசுரைப்பார் ஈரிரண்டு மால் வரைத்தோள்
செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்.


[அழகிய கப்பல்கள் உலாவும்  பாற்கடலை கடைந்த அந்த மாதவனை, கேசவனை , சந்திரனை ஒத்த அழகுடைய பெண்கள் பாடி தங்களுக்கு வேண்டிய வரங்களை (பறை) யாசித்துப் பெற்றதை பற்றி சொல்லும்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் பிறந்த தாமரை மலர் மாலை சூடிய, பட்டர்பிரான் பெரியாழ்வாரின் மகளாகிய, கோதையின் (ஆண்டாள்) சங்க தமிழ் மாலையாம் இந்த முப்பது பாடல்களையும் தவறாமல் சொல்பவர்கள், நான்கு வலிமையான தோள்களையும் அழகிய சிவந்த கண்களையும் கொண்ட திருமாலின் அருள் பெற்று என்றும் இன்புறுவர். ]
🔸(வங்கக் கடல்கடைந்த)
பாற்கடலைக் கடைந்தவர்கள் தேவர்களும் அசுரர்களுமென்று அவர்கள் எண்ணலாம். ஆயினும் அவர்களுக்கு ஆதாரமாக கூர்மமாக (ஆமை) நடுவில் நின்று, மந்தர மலையைத் தாங்கியவன், பரந்தாமன் அல்லவா? கூர்மமாக முதுகில் மலையைத் தாங்கிப் திருப்பாற்கடலைக் கடைந்தது மட்டுமல்ல, மோஹினி அவதாரமெடுத்து அரக்கர்களை மயக்கி, அமிர்தமெல்லாம் தேவர்களுக்கேக் கிடைக்கும் படிச் செய்தவனும் இந்த மாதவன் தான். நாமும் எல்லாக் காரியங்களையும் நான் செய்தேன், நானே செய்தேன் என்று அகங்காரம் கொள்கின்றோமே! நமக்குள்ளே சக்தியாக இருந்து நம்மை ஆட்டுவிக்கும் சூத்திரதாரி இறைவனே அல்லவா?

மாதவனை- மா என்கிற இலக்குமியின் கணவனை. பாற்கடலைக் கடைந்த சமயத்தில் முதலில் ஆலகால விஷம் வந்தது. அதைக் கருணையே வடிவான சிவபெருமான் உட்கொண்டு, நீலகண்டன் ஆனார். மேலும் கற்பக மரம்,காமதேனு பசு என பல உயர்வானவைகள் வெளிப்பட்டன. அவற்றையெல்லாம் இந்திராதிதேவர்கள் ஒவ்வொருவரும் எடுத்துக் கொண்டார்கள். ஆனால் ஶ்ரீலக்ஷ்மி தேவியோ, அங்கே இருந்தவர்களில் யார் தன்னை அடையுமளவிற்கு உயர்வானவர்களென்று ஆராய்ந்து, ஶ்ரீமந்நாராயணனே என்று தெளிந்து அவனது வல மார்பிலே உரைந்தாள்.

தேவர்களும் அசுரர்களும் அமரத்துவம் தருகின்ற அமுதத்தை வேண்டிப் பாற்கடலைக் கடைவதான செயலுக்குக் கண்ணனிடம் (திருமால்) உதவி வேண்ட, அதைக் காரணமாக வைத்து, அந்த நாராயணன் தன்னுடைய மனதிற்கு உகந்தவளாகிய பிராட்டியெனும் பெண்ணமுதைப் பெற்றான். அதைக் குறிக்கும்படி 'மாதவன்' என்ற பெயரைச் சொல்கிறாள் ஆண்டாள்.

முக்கண்ணன்,சிவனோ நஞ்சுண்ண, விண்ணவர் அமுதுண்ண, கண்ணன் பெண்ணமுது கொண்டான் என்பதாக 'ஶ்ரீபராசர பட்டர்' விளக்கம் தருகிறார். உண்மையிலேயே அமுதத்தை அடைந்தவன் திருமால் மட்டுமே.  🔹🔸(கேசவனை)சுருள்முடி கொண்டவனை.
 கேசவன் மற்றும் மார்கழி மாதத்தின் தொடர்பு பற்றி அறிமுகப் பகுதியிலேயே அறிந்தோமல்லவா?
 அடியவருக்குத் துன்பமுண்டாக்கும் கேஸி (குதிரை வடிவம்) முதலான பல அசுரர்களை அழித்தவனை.
🔸(திங்கள் திருமுகத்து சேய்இழையார்) பால்நிலா முகமும், நகைகளும் அணிந்த ஆயர்பாடிப் பெண்டிர்.
ஶ்ரீகண்ணனைக் கண்டதாலே குளிர்ச்சியும், மலர்ச்சியும், மகிழ்ச்சியுமான பற்பல செல்வநலங்களை அடைந்த அழகிய திங்கள் முகம் அந்த ஆயர்குலப் பெண்களுக்கு !
27 ஆம் பாசுரத்திலே மார்கழி நோன்பிருந்து பெற்ற சூடம், பாடகம் முதலான பற்பல அணிகலன்களை அணிந்த பெண்கள் அல்லவா? ஆகவே "சேயிழையார்" என்கிறாள் ஶ்ரீஆண்டாள்.
🔹(சென்று இறைஞ்சி)  29 பாசுரங்களில் சொன்னதெல்லாம் செய்து, வணங்கி
அங்கு (அப்பறைகொண்ட ஆற்றை)  கண்ணனளித்த பறையினைப் பெற்ற வழிமுறைகளை. அங்கு
🔹(அப்பறை ) ஆயர்பாடியில், ஆயர்குலப் பெண்டிர், நந்தகோபனது மாளிகையில் இருந்த ஶ்ரீகண்ணனைக் கண்டு, அவன் மனைவியாகிய ஶ்ரீநப்பின்னை தேவியை முன்னிட்டுப் பெற்றப் பறை, அந்தப்பறை, அதுபோல வேறொன்று இல்லாத சிறப்பான பறை. அப்பேர்பட்ட பறை.
🔹🔸(அணிபுதுவைப் பட்டர்பிரான் கோதை) இந்த பூவுலகிற்கே அணியான புதுவை என்கிற ஶ்ரீவில்லிபுத்தூரில் வாழ்ந்த விஷ்ணுசித்தர் பெரியாழ்வாரின் திருமகள் கோதை பிற்காலத்தில் பக்தியால் உணர்ந்து பாடினாள். ஊரும் பேரும் சொல்லிப் பெருமை செய்கிறாள் ஶ்ரீஆண்டாள்.
🔹🔸(பைங்கமலத் தண்தெரியல்)  குளிர்ச்சிபொருந்திய தாமரை மாலை அணிந்தவள். அலங்கல், ஆரம், இண்டை, கண்ணி, கோதை, தாமம், தார்,தொங்கல், தொடையல், பிணையல், வடம், தெரியல்  இவை பலவகை மாலைகள். அதில் தெரியல் என்பது தொங்குமாலை. இப்போது அது "ஆண்டாள் மாலை"யென்றே வெகுஜனங்களால் குறிக்கப்படுகின்றது.
🔹🔸(சங்கத் தமிழ்மாலை) வடமொழி கோலோச்சிய காலத்தில் வாழ்ந்தாலும், வடமொழி நன்கு தெரிந்தவளாயிருந்தாலும், அதிலே யாப்பிசைத்தால் பெருமையுண்டு என்று தெரிந்திருந்தாலும், எல்லோருக்கும் புரியும் வகையிலே,தெய்வத் திருமொழியாம், இனிமைத் தமிழிலே 'ஶ்ரீஆண்டாள்' தனது மேலான திருப்பாவையைப் பாடினாள்.
சங்கம் என்றால் கூட்டம் என்று பொருள். தமிழ்ப் புலவர்கள், அறிஞர்கள் பலர் கூடியிருந்த அவைக்கு சங்கம் என்று பெயர்.தமிழகத்தின் சங்க காலத்தில், புலவர்கள் இயற்றிய இலக்கியங்களைத் தரம் ஆராய்ந்து, இயற்றியவரைக் கேள்விகள் கேட்டு விளக்கம் பெற்று, ஏற்றுக்கொள்வதா, புறந்தள்ளுவதா என்று சங்கப்புலவர்கள் கூடி முடிவு செய்வார்கள். கோதை வாழ்ந்த காலத்தில் சங்கம் இருந்ததா? இல்லையா? என்பது போன்ற சரித்திர ஆராய்ச்சியில் ஈடுபட வேண்டியுள்ளது.
வேறொருவிதத்தில் ஶ்ரீவைஷ்ணவ நெறியினர் சொல்லும் விளக்கம், கூட்டமாய்க் கூடி அடியவர்களெல்லாம் ஒன்றாக  பாராயணம் செய்யப்பட்ட "திருப்பாவை என்னும் தோத்திர மாலை" என்று கொள்ளலாம் என்பர்





🔹🔸(முப்பதும் தப்பாமே) ஒரு இரத்தினமாலையில், ஒரு மணி குறைந்தாலும் அதன் அழகுக்குக் குறைவு ஏற்படுமல்லவா? ஆகவே உயர்ந்த பாமாலையான இந்த 30 பாசுரங்களில் ஒன்றும் குறையாமல், அத்தனையும் பாட வேண்டும். முப்பதையும் இல்லாவிட்டாலும் 29 ஆவது பாசுரம் சிற்றஞ் சிறுகாலையை யாவது சொல்ல வேண்டுமென்பது பெரியோர் கூற்று.
🔹🔸(இங்குஇப் பரிசுரைப்பார்) - இம்மண்ணுலகிலேயே ஓதிவர,  இறைவன் எங்கே எங்கே என்று அலைய வேண்டிய அவசியமில்லை. அவனுடைய அருளைப் பெறுவதற்கு, இம்மண்ணுலகிலேயே கோதையளித்தத் திருப்பாவையினை ஓதினால் போதுமே! நாம் ஆயர்பாடியிலிருந்த இடைச்சிகளாகவோ, பரந்தாமனைப் பாடிய ஆழ்வார்களாகவோ, அவன் பணியிலே இருக்கும் ஆச்சார்யர்களாகவோ , ஆண்டாளைப் போல அவனையே மணாளனாக வரிக்கின்றவர்களாகவோ இல்லாமல் போனாலும், இந்த திருப்பாவை முப்பதும் தப்பாமல் சொன்னோமானால், இறையருள் பெறலாம்.
🔹🔸(ஈரிரண்டு மால்வரைதோள்)  வரை = மலை போன்ற பெரிதான நான்கு தோளுடைய. செங்கண் திருமுகத்துச்
🔹🔸(செல்வத் திருமாலால்)- செவ்வரியோடிய விழிகளும், அழகுமுகமும் கொண்ட, திருமகள் நாயகன் பரமன் அருளால்
🔹🔸(எங்கும் திருவருள்பெற்று இன்புறுவர்)  எல்லா உலகிலும் இன்பமுற்று வாழ்வர். செங்கண், அங்கண், என்றெல்லாம் சொல்லுவது இறைவனது அருட்பார்வை மீதில் அடியவருக்கு இருக்கும் ஆசையினால் ! இறைவனது கண்களைத் தாமரைக்கு ஒப்பாகவே பலரும் பாடியிருக்கிறவாறு ஆண்டாளும் பாடியுள்ளாள்.







🔹🔸(சேயிழையார்) ஆச்சார்யர் உபதேசம் பெற்று, அடியவர் குழுவோடு கூடி சரணாகதி செய்து, இறைத்தொண்டு செய்கின்றவர்களே சேயிழையார், நேரிழையீர் !
கோவிந்த நாமத்தைப் போலவே கோதா நாமத்திற்கு பொருளுண்டு. கோ என்றால் நல்ல உயர்ந்த கருத்துகள் என்று பொருள் கொண்டால், ததாயதே - தா- என்றால் தருவது என்று கொண்டால், கோதா - அத்தகைய "உயர்ந்த கருத்துக்களைத் தந்தவள்" என்று பொருள். திருப்பாவை முழுதுமே மிகவுயர்ந்த வேத ஸாரத்தை உள்ளடக்கியது தான்.
🔹🔸(பைங்கமலத் தண்தெரியல் பட்டர்பிரான்கோதைசொன்ன)  பசுமை பொருந்திய திருத்துழாய் மாலையும், செந்தாமரை மாலையும் அணிந்து, ஒரு வைணவன் பரமனையும், தாயாரையும் சேர்த்தே வணங்க வேண்டும் என்ற உண்மையினை ஒரு குருவாய் , தந்தையாய் கோதைக்கு உபதேசம் செய்தவர் ஶ்ரீபெரியாழ்வார்.

 ஶ்ரீவில்லிப்புத்தூர் பட்டர்பிரானாகிய பெரியாழ்வார் ஆண்டாளின் தந்தை மட்டுமல்ல, ஆச்சார்யரும் அவரே ! இங்கே தன்னை ஆண்டாள் குருவின் சிஷ்யையாகத் தான் அடையாளங் கூறிக்கொள்கிறாள். ஶ்ரீமதுரகவியாழ்வார் தன்னுடைய ஆசிரியரான ஶ்ரீநம்மாழ்வாரை முன்னிட்டே பாசுரங்கள் இயற்றியதைப் போலவே, ஶ்ரீஆண்டாளும் தன்னுடைய ஆசிரியரை முன்னிட்டே, சரணாகத சாரமாக விளங்கும் இந்தத் திருப்பாவையைப் பாடியிருக்கிறாள். இதுவே திவ்வியபிரபந்தங்களுள், திருப்பாவைக்கு இருக்கும் தனிச்சிறப்பு என்று ஶ்ரீவைஷ்ணவ குருபரம்பரையினர் கருத்து.
🔹🔸(ஈரிரண்டு மால்வரைதோள்)  சங்கும் சக்கரமும் தாங்கும் இருகரங்கள், அபயமும் வரமும் அருளும் இருகரங்கள் என்று நான்கு கரங்களைத் தாங்கும் அகண்ட பெருந்தோள்கள்.
🔹🔸(செல்வத் திருமாலால்)  இப்பாசுரம் தொடங்கும் போதும் திருமகள் தொடர்பு, முடியும் போதும் திருமகளுடன் கூடிய திருமால் என்று உறுதியிடப் படுகிறது.


 🔹🔸  ||திருப்பாவை ஜீயர்|| 🔹🔸

🔸திருப்பாவை முப்பதுக்கும் வங்கக்கடல் கடைந்த மாதவன் தான் லக்ஷ்யபூதன். கண்ணபிரானை லக்ஷ்ய பூதனாகக்கொள்ளுமவர்கள்  தேவர்களின் பிரார்த்தனையினால்  கடலைக் கடைந்து அமுதம் கொடுத்து,  "பலேக்ரஹிர்  ஹி கமலாலாபேந ஸர்வச் ச்ரம:" என்று பட்டரருளிச்செய்த படியே பிராட்டியையும் பெற்று மகிழ்ந்த எம்பெருமானைப் பொருளாகக் கொள்க. திருப்பாவை  ஜீயரென்ற திருநாமத்திற்கேற்ப எம்பெருமானாரையே திருப்பாவைக்கு லக்ஷ்ய பூதராகக் கொள்ளுமவர்கள்  இங்ஙனே பொருள்  காண்க:−  "நிர்மத்த்ய ஸ்ருதி ஸாகராத்" என்றும் "நாமாம்யஹம் த்ராவிட வேத ஸாகரம்" என்றும் கடலாகச் சொல்லப்பட்ட  ஸம்ஸ்க்ருத த்ராவிட உபய வேதங்களையும் திருநாவின் மந்த்ரத்தால் கடைந்து "வஸஸ்ஸுதாம் வஸுமநஸோ பௌம: பிபந்த்வந்வஹம்" என்று ஸ்வாமி தாமே அருளிச்செய்தபடி நிலத்தேவர்கள் நித்யாநுபவம் பண்ண அமுதமளித்தவர் ஸ்வாமி.


🔸(மாதவனை) மா- மஹத்தான; தவனை- தவத்தையுடையவரை; மஹாதவத்தையுடைய எம்பெருமானாரை என கொள்க.
🔸(இங்கு இப்பரிசுரைப்பார்) இங்ஙனே முப்பது பாசுரங்களுக்கும் நாம் காட்டின நிர்வாஹமும் அணி புதுவை பைங்கமலத் தண்டெரியல் பட்டர்பிரான் கோதை திருவுள்ளமுகந்ததேயென்று, கொண்டு உபந்யாஸ கோஷ்டிகளிலெடுத்துரைக்குமவர்கள்.

(செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர்) "பீதகவாடைப்பிரானார் பிரமகுருவாகி வந்து" [பெரியாழ். திரு.5-2-8]  என்ற பெரியாழ்வாரின் அருளிச் செயலின்படியும், "ஸா மூர்த்திர் முரமர்த நஸ்ய ஜயதி" என்ற யதிராச ஸப்ததி [ஸ்லோ:63] யின்படியும், ஸாக்ஷாத் ஶ்ரீமந்நாராயண அவதாரமான ஸ்வாமி எம்பெருமானாருடைய திருவருளை எங்கும் பெற்று "அம்ருதஸாகராந்தர் நிமக்ந ஸர்வாவயவாஸ் ஸுகமாஸீரந்" என்று தலைக்கட்டாயாயிற்று.

‘பகவதா ஆத்மீயம் ஸ்ரீமத் பாதாரவிந்தயுகளம்  ஸிரஸி  க்ருதம்  த்யாத்வா அம்ருதஸாகராந்தர் நிமக்ந ஸர்வாவயவஸ் ஸூகமாஸீத‘ (எம்பெருமானால் தன்னுடைய பரமபோக்யமான திருவடித்தாமரைகளை தன் தலையில் வைக்கப்பட்டதாக த்யாநம் பண்ணி ஆனந்தமாகிற அமுதக்கடலுக்குள்ளே மூழ்கிய எல்லா அவயங்களையும் உடையவானைக் கொண்டு ஸுகமாக இருக்கக்கடவன்) என்று ஸ்ரீ வைகுண்ட கத்யத்தில் எம்பெருமானார் ஸ்வாமி ஶ்ரீராமாநுஜர், ஶ்ரீமந்நாராயணன் விஷயத்தில் அருளிச்செய்தார்.




🔷🔶 ஶ்ரீவில்லிபுத்தூர் மங்களாசாசன பாசுரங்கள் 🔷🔶

🔶மின்னனைய நுண்ணிடையார்
          விரிகுழல் மேல் நுழைந்த வண்டு
     இன்னிசைக்கும் வில்லிபுத்தூர்
          இனிதமர்ந்தாய் உன்னைக் கண்டார்
     என்ன நோன்பு நோற்றாள் கொலோ
          இவளைப் பெற்ற வயிறுடையாள்
     என்னும் வார்த்தை எய்து வித்த
          இருடீ கேசா முலையுணாயே
            
[பெரியாழ்வார் திருமொழி: 2-2-6]


🔶மென்னடை யன்னம் பரந்து விளையாடும்
வில்லிப் புத்தூருறை வான்றன்
பொன்னடி காண்பதோ ராசையினாலென்
பொருகயற் கண்ணினை துஞ்சா
இன்னடி சிலோடி பாலமு தூட்டி
எடுத்தவென் கோலக் கிளியை
உன்னோடு தோழமை கொள்வன் குயிலே
உலகளந் தான்வரக் கூவாய்!

[நாச்சியார் திருமொழி:5-5]

🔷🔶ஶ்ரீதேசிகன் பிரபந்தம் - ஸ்வாமி ஸ்ரீ வேதாந்த தேசிகன் அருளியவை

🔶வேயர்புகழ் வில்லிபுத்தூர் ராடிப்பூரம்
மேன்மேலும் மிகவிளங்க விட்டுசித்தன்
தூயதிரு மகளாய் வந்த ரங்கனார்க்குத்
தூழாய்மாலை முடிசூடித் கொடுத்த மாதே!
நேயமுடன் திருப்பாவை பாட்டாறந்தும்
நீயுரைத்த தையொரு திங்கட்பாமாலை
ஆயபுகழ் நூற்றுநாற்பத்து மூன்றும்
அன்புடனே யடியேனுக்குகருள் செய்நீயே


🔷🔶 ஸ்வாமி ஸ்ரீமணவாளமாமுனிகள் தன்னுடைய உபதேச ரத்தினமாலையில் ( 22,23,24 ) ஆண்டாளை இவ்வாறு புகழ்கிறார்

🔶இன்றோ திருவாடிப்பூர மெமக்காக
அன்றோவிங் காண்டா ளவதரித்தாள் - குன்றாத
வாழ்வாக வைகுந்த வான்போகந் தன்னையிகழ்ந்து
ஆழ்வார் திருமகளாராய். (22)


🔶பெரியாழ்வார் பெண்பிள்ளையாய் ஆண்டாள் பிறந்த
திருவாடிப் பூரத்தின் சீர்மை - ஒருநாளைக்
குண்டோமனமே யுணர்ந்துபார் ஆண்டாளுக்
குண்டாகி லொப்பிதற்கு முண்டு (23)


🔶அஞ்சு குடிக்கொரு சந்ததியாய் ஆழ்வார்கள்
தஞ்செயலை விஞ்சிநிற்கும் தன்மையளாய் - பிஞ்சாய்ப்
பழுத்தாளை ஆண்டாளைப் பக்தியுடன் நாளும்
வழுத்தாய் மனமே மகிழ்ந்து (24)

🔹🔸 [ஶ்ரீஆண்டாள் மங்கள ஸ்லோகங்கள்] 🔹🔸

ச்வோச்சிஷ்ட மாலிகா பந்த கந்த பந்துர ஜிஷ்ணவே|
விஷ்ணு சித்த தனுஜாயை  கோதாயை நித்ய மங்களம்||

மாத்ருசா (அ)கிஞ்சன த்ராண பத்த கங்கண பாணயே|
விஷ்ணு சித்த தனுஜாயை  கோதாயை நித்ய மங்களம்||

ஸ்ரீ மத்யை விஷ்ணு சித்தார்ய மநோ நந்தன ஹேதவே|
நந்த நந்தன ஸூ ந்த்ர்யை கோதாயை நித்ய மங்களம்||

நல்ல திருமல்லிநாடியார்க்கு மங்களம்!
நால்திசையும் போற்றும் எங்கள் நாச்சியார்க்கு மங்களம்!
மல்லிகை தோள் மன்னனாரை
மணம் புரிந்தார்க்கு மங்களம்!
மாலை சூடிக்கொடுத்தாள்
மலர்தாள்களுக்கு மங்களமே!!


பல்லாண்டு பல்லாண்டு பல்லா யிரத்தாண்டு
பலகோடி நூறாயிரம்
மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா
உன்  சேவடி செவ்விதிருக் காப்பு!

அடியோமோடும் நின்னோடும்
பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு,
வடிவாய் நின்வல மார்பினில்
வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு,
வடிவார் சோதி வலத்துறையும் 
சுடராழியும் பல்லாண்டு,
படைபோர் புக்கு முழங்கும்  
அப்பாஞ்ச சன்னியமும் பல்லாண்டே.

 🔸[ பொது தனியன்கள் ]

ஸர்வதேஸ தஸாகாலேஷ்வவ்யாஹத பராக்ரமா
ராமா நுஜார்ய திவ்யாஜ்ஞாவர்த்ததாமபிவர்த்ததாம்,

ராமாநுஜார்யதிவ்யாஜ்ஞா ப்ரதிவாஸரமுஜ்வலா
திகந்தவ்யாபிநீபூயாத் ஸாஹிலோகஹிதைஷிணீ.

ஸ்ரீமந்ஸ்ரீரங்கஸ்ரியமநுபத்ரவாமநுதிநம்ஸம்வர்த்தய
ஸ்ரீமந்ஸ்ரீரங்கஸ்ரியமநுபத்ரவாமநுதிநம்ஸம்வர்த்தய.

🔹🔸[ தென்கலை சாற்றுமுறை ] 🔹🔸

நமஸ்ஸ்ரீஸைலநாதாய குந்தீநகரஜந்மநே
ப்ரஸாதலப்தபரமப்ராப்ய கைங்கர்ய ஸாலிநே.

ஸ்ரீஸைலேஸ தயாபாத்ரம் தீபக்த்யாதிகுணார்ணவம்
யதீந்த்ர ப்ரவணம் வந்தே ரம்யஜாமாதரம்முநிம்.

வாழி திருவாய் மொழிப்பிள்ளை மாதகவால்
வாழும், மணவாள மாமுனிவன் - வாழியவன்
மாறன் திருவாய் மொழிப்பொருளை மாநிலத்தோர்
தேறும் படியுரைக்கும் சீர்.

செய்ய தாமரைத் தாளிணை வாழியே,
சேலை வாழி திருநாபி  வாழியே,
துய்ய மார்பும் புரிநூலும் வாழியே,
சுந்தரத்திருத்தோளிணை  வாழியே,
கையுமேந்திய முக்கோலும் வாழியே,
கருணை பொங்கிய கண்ணினை வாழியே,
பொய்யிலாத மணவாள மாமுனி
புந்திவாழி புகழ்வாழி  வாழியே !

அடியார்கள் வாழ,
அரங்க நகர் வாழ,
சடகோபன் தண்தமிழ்நூல் வாழ,
கடல் சூழ்ந்த மன்னுலகம் வாழ,
மணவாள மாமுனியே, இன்னுமொரு நூற்றாண் டிரும்.


🔹🔸[ பெரியாழ்வார் வாழித்திருநாமம் ] 🔹🔸

நல்ல திருப்பல்லாண்டு நான்மூன்றோன் வாழியே !
நானூற்று அறுபத்தொன்றும் நமக்குரைத்தான் வாழியே !
சொல்லரிய லானிதனிற் சோதிவந்தான் வாழியே !
தொடை சூடிக்கொடுத்தாளைத் தொழுமப்பன் வாழியே !
செல்வநம்பி தனைப்போலச் சிறப்புற்றான் வாழியே !
சென்று கிழியறுத்து மால் தெய்வமென்றான் வாழியே !
வில்லிபுத்தூர் நகரத்தை விளங்கவைத்தான் வாழியே !
வேதியர்கோன் பட்டர்பிரான் மேதினியில் வாழியே!.



🔹🔸[ ஆண்டாள் வாழித்திருநாமம் ] 🔹🔸

திருவாடிப் பூரத்துச் செகத்துதித்தாள் வாழியே!
திருப்பாவை முப்பதூஉம் செப்பினாள்  வாழியே!
பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை வாழியே!
பெரும்பூதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே!
ஒருநூற்று நாற்பத்து மூன்றுரைத்தாள் வாழியே!
உயரரங்கர்க் கேகண்ணி யுகந்தளித்தாள் வாழியே!
மருவாரும் திருமல்லி வளநாடு வாழியே!
வண்புதுவை நகர்க்கோதை மலர்ப்பதங்கள் வாழியே!

[ வாழி வாழி மதிள ரங்கேசனார்
வாழி வாழி மலை அலங்காரனார்
வாழி வாழி வட வேங்கடவனார்
வாழி வாழி வடபெருங் கோயிலான்
வாழி வாழி மருவாரும் மன்னனார்
வாழி வாழி வளர்கோதை வாண்முகம்
வாழி வாழி மருங்காரும் கொய்சகம்
வாழி வாழி வளர் குங்குமக் கொங்கை
வாழி வாழி மலர்தாள்கள் இரண்டுமே.]

🔹🔸[ஶ்ரீ உடையவர் வாழித்திருநாமம் ] 🔹🔸

சீராரும் எதிராசர் திருவடிகள் வாழி!
திருவரையில் சாத்திய செந்துவராடை வாழி!
ஏராரும் செய்ய வடிவு எப்பொழுதும் வாழி!
இலங்கிய முந்நூல் வாழி! இணைத் தோள்கள் வாழி!
சோராத துய்ய செய்ய முகச் சோதி வாழி!
தூ முறுவல் வாழி! துணை மலர்க் கண்கள் வாழி!
ஈராறு திரு நாமம் அணிந்த எழில் வாழி!
இனி திருப் போடு எழில் ஞான முத்தரை வாழியே!

அறு சமயச் செடி யதனை யடி யறுத்தான் வாழியே!
அடர்ந்து வரும் குதிட்டிகளை யறத் துரந்தான் வாழியே!
செறு கலியை சிறிதும் அறத் தீர்த்து விட்டான் வாழியே!
தென்னரங்கர் செல்வம் முற்றும் திருத்தி வைத்தான் வாழியே!
மறையதனில் பொருள் அனைத்தும் வாய் மொழிந்தான் வாழியே!
மாறனுரை செய்த தமிழ் மறை வளர்ந்தான் வாழியே!
அறம் மிகு நற் பெறும் பூதூர் அவதரித்தான் வாழியே!
அழகாரும் எதிராசர் அடி இணைகள் வாழியே!



ஶ்ரீமதே ரம்யஜாமாத்ரு முனீந்த்ராய மஹாத்மநே|
ஶ்ரீரங்க வாஸிநே பூயாத் நித்யஶ்ரீ நித்ய மங்களம்||

          🔹 🔸  🔹 🔸 🔹



               🔹 🔸  🔹 🔸 🔹

 ஸ்ரீஆண்டாள் திருவடிகளே சரணம்!
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்!!

               🔹 🔸  🔹 🔸 🔹

கோதையின் கீதை நிறைவுப்பகுதி (33)யினை
அடுத்த பதிவு - Post ல  பார்ப்போம்.

                அன்புடன்

      ஸ்ரீ பா ல சு பி க் ஷ ம்
E.P.I. இராம சுப்பிரமணியன்.


Comments

Popular posts from this blog

சிறுதெய்வங்களோடு வந்த பெருந்தெய்வங்கள் (பகுதி-1)

காலந்தோறும் மதுரை (பகுதி − 1)

கோதையின் கீதை (பகுதி - 33)