கோதையின் கீதை (பகுதி - 14)



• வராஹ ஷேத்திரம்

முன்னொரு காலத்தில் வராஹ வழிபாடே நாடெங்கும் பரவியிருந்தது.
அப்போது தலைசிறந்த வராஹ ஷேத்திரங்களாகத் திகழ்ந்த தலங்கள்
திருமலை, திருக்கடன் மல்லை, திருவிட வெந்தை, தஞ்சை மாமணிக் கோயில்,
ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீமுஷ்ணம் போன்றன.

எம்பெருமான் வராஹ ரூபியாய் பிராட்டியைத் தன் மடியில்
வைத்துக்கொண்டு நம்பாடுவான் போன்ற பக்தர்களின் கதையை (ஸ்ரீவில்லிபுத்தூரில்)
பிராட்டிக்கு கூறியதாக ஐதீகம். எனவே இதனை “வராஹ ஷேத்ரம்” என்றே பௌராணிகர்கள்
குறிப்பிடுகின்றனர்.

     வராஹ புராணத்தின் ரகஸ்ய காண்டத்தில் 9 அத்தியாயங்களில் இத்தல
வரலாறு பின்வருமாறு பேசப்பட்டுள்ளது.

 ஒரு காலத்தில் “சுதபா” என்னும் முனிவர் திருமாலிருஞ் சோலையில்
தெளிவிசும்பு பெற தவமிருக்கும் கால் துர்வாச முனிவர் தமது சீடர்களுடன்
அவரைக் காண வந்து வெகுநேரம் அவரது குடிலில் காத்திருந்தார். ஆனால்
நீராடுவதில் விருப்பம் கொண்டு ஜலக்கிரீடையில் ஈடுபட்டவராக
தண்ணீருக்குள்ளேயே மூழ்கி இருந்தார். துர்வாசரின் சினம்
அதிகரித்துக்கொண்டே சென்றது. வெகுநேரம் கழித்து வந்த சுதபா முனிவரை
வெகுண்டு நோக்கிய துர்வாசர், நீர் யாம் வந்திருப்பதை அறிந்தும் எம்மை
மதியாது தண்ணீருக்குள்ளேயே மூழ்கிக் கிடந்ததால் “எப்போதும்
நீருக்குள்ளேயே மூழ்கிக்கிடக்கும் மண்டுகமாகக் கடவாய்” என்று
சபித்துவிட்டார்.

     தமது நிலையுணர்ந்த சுதாப முனிவர் தம்மை மன்னித் தருளும்படி மன்றாடி வேண்டினார். அதற்கு அவர் வராஹ ஷேத்திரத்திற்கு அருகில்
தருமாத்ரி (செண்பகாரண்யம்)என்றொரு மலையுள்ளது. அதற்கருகில் பிரவாஹித்துக்
கொண்டிருக்கும் (நூபுர கங்கை) புண்ணியநதி யொன்றுள்ளது. எண்ணற்ற ரிஷிகள் அங்கு
தவஞ்செய்து அந்நதியில் நீராடிய மாத்திரத்தில் சாபந் தீர்ந்து தெளிவிசும்பும்
பெற்றுள்ளனர். அவ்வருவியில் நீராடின மாத்திரத்தில் உன் சாபம் தீரும்
என்று துர்வாசர் கூறவே, அவ்வருவியில், யான் தெளிவிசும்பு பெற விரும்பி
தவம் மேற்கொண்ட திருமாலிருஞ் சோலையானையே அங்கு காணவேண்டும்
என்று வேண்ட அதுவும் பலிக்குமென்றார். துர்வாசரின் சாபம் பலிப்பதற்கான
ஒரு முகூர்த்த நேரம் ஆவதற்குள் தம் தபோ பலத்தால் ஆகாய மார்க்கத்தில்
பறந்து அந்நதியில் (நூபுர கங்கையில்) நீராடினவுடன் சாபவிமோசனம் பெற்று
திருமாலிருஞ்சோலை சுந்தர ராஜனையே தியானம் பண்ண அவரும் பிரத்யட்சமானார். இவ்வாறு திருமாலிருஞ்சோலை எழிலழகன் இங்கேவந்து(காட்டழகர்கோயில்) குடிகொண்டார். இஃது வராஹ ஷேத்திரம் எனப் பெயர் விளங்கப்பட்ட காலம், காலவரைக்கு உட்படாத முன்னொரு யுகத்தில் நடந்ததாகும்.



கர்ம யோகியாகவும் அனுஷ்டானத்தில் சிறந்தவராகவும் இருந்த இடையர் ஒருவர் பெற்ற பாகவத பெண்பிள்ளையை ஆண்டாள் எழுப்பிய பாசுரத்தை இதற்கு முந்தைய ‘கற்று கறவை…’ பாசுரத்தில் பார்த்தோம். இன்றைய பாசுரத்தில், அத்தகைய அனுஷ்டானத்தை எல்லாம் விட்டு விட்டு கண்ணனையே அண்டியிருந்த இடையன் ஒருவனை குறிப்பிட்டு சொல்கிறாள் ஆண்டாள். இந்த கோபாலன் கண்ணனுக்கு தொண்டு செய்வதில் – கைங்கர்யம் செய்வதில் மிகவும் ஆவல் கொண்டு அதிலேயே தன்னை ஈடுபடுத்திக் கொண்டு இருக்கிறான். இவன் தன்னுடைய சொத்தான பசுக்களை மேய்ப்பது, பால் கறப்பது போன்ற காரியங்களை சரிவர செய்வதில்லை. ஸ்வதர்மத்தை சாமான்யமாக கொண்டு அதை விட்டு, கிருஷ்ணனுக்கு தொண்டு செய்வதை விசேஷ தர்மமாக பிடித்துக்கொண்டிருக்கிறான். கைங்கர்யஸ்ரீ எனும் செல்வத்தைப்பெற்ற நற்செல்வன் தங்காய்! என்று அவனுடைய தங்கையை எழுப்புகிறாள் ஆண்டாள்.



• திருப்பாவை பன்னிரண்டாம் பாடல்

கனைத்து இளங் கற்றெருமை கன்றுக்கு இரங்கி
நினைத்து முலைவழியே நின்றுபால் சோர
நனைத்து இல்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்!
பனித்தலை வீழ நின் வாசற்கடை பற்றிச்
சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச்செற்ற
மனத்துக் கினியானை பாடவும் நீ வாய் திறவாய்
இனிதான் எழுந்திராய், ஈதென்ன பேருறக்கம்,
அனைத்து இல்லத்தாரும் அறிந்தேலோரெம்பாவாய்.

[பால் கறப்பார் இன்றி, இளங்கன்றுகளுடைய எருமைகளின் முலைக்காம்புகள் கடுத்து, அவை தங்களது கன்றுகளை நினைத்த மாத்திரத்தில், அவற்றின் முலைக்காம்புகளின் மூலம் பால் இடைவிடாது சுரந்து, வீட்டின் தரை ஈரமாகி, அதனால் வீடெங்கும் பாலும் மண்ணும் கலந்து சேறாகியிருக்கும் இல்லத்துக்குத் தலைவனான பெருஞ்செல்வனின் தங்கையே!
பனி எங்கள் தலையில் விழுவதை பொருட்படுத்தாமல், உன் மாளிகையின் வாசற்காலைப் பற்றி நின்ற வண்ணம், (சீதாபிராட்டியை தன்னிடமிருந்து பிரித்ததால்) பெருங்கோபம் கொண்டு இலங்கை வேந்தன் ராவணனை மாய்த்தவனும், நம் உள்ளத்துக்கினியவனும் ஆன ஸ்ரீராமபிரானின் திருப்புகழை நாங்கள் பாடிக்கொண்டிருப்பதை கேட்டும் நீ ஏதும் பேசாதிருக்கலாமா! இப்போதாவது விழித்தெழுவாய்! ஊரில் உள்ளோர் அனைவரும் எழுந்து விட்ட பின்னரும் நீ பெருந்தூக்கத்தில் இருக்கலாமா! உன் ஆழ்ந்த உறக்கத்தின் பொருள் தான் என்ன?]


**






பாசுர உள்ளுரை:

• கனைத்து இளங் கற்றெருமை கன்றுக்கு இரங்கி - இங்கு எருமை கருணை மிக்க (தன்னிடம் உள்ள ஞானத்தை வாரி வழங்கும்) ஆச்சார்யனைக் குறிப்பில் உணர்த்துகிறது. கன்றுகள் ஞானப்பாலால் உய்வு பெறும் சீடர்களைக் குறிக்கிறது.
• முலைவழியே நின்றுபால் சோர - எருமையின் நான்கு முலைக் காம்புகளிலிருந்து வெளிப்படும் பாலானது, நான்கு வேதங்களின் சாரத்தைக் குறிப்பது என்பது இதன் உட்பொருளாம். இதையே, சுருதி, ஸ்மிருதி, பஞ்சராத்ரம், திவ்ய பிரபந்தம் என்ற நான்கை கற்றுணர்ந்து கிடைத்த ஞானமாகவும் எடுத்துக் கொள்ளலாம்.
• மனத்துக்கினியானை - கோகுலத்து கோபியர் கண்ணனைக் காணும் பெரும்பேறு பெற்றவர்கள். அதனால், அவர்களுக்கு கண்ணபிரான் "கண்ணுக்கினியவன்" ஆவான் :) ஆனால், ஸ்ரீராமபிரானை (ராம அவதாரம் முடிந்து விட்டபடியால்!) கோபியரால் நினைக்க மட்டுமே முடியும், அதனாலேயே அவர்களுக்கு சக்ரவர்த்தி திருமகன் "மனத்துக்கினியவன்" ஆகின்றான் என்று அபினவ தேசிகன் சுவாமிகள் கூறுவார்.
• சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச் செற்ற மனத்துக்கினியான் என்கிறாள். ஆண்டாள் இங்கே ராமனைப் பாடியதற்கு சிறப்பான அர்த்தங்களை பூர்வாசார்யர்கள் அருளியிருக்கிறார்கள். கண்ணன் அவன் மீது ப்ரேமை கொண்ட கோபிகைகளை காக்க வைத்து, நிர்தாட்சண்யமாக ஏங்க வைத்து இரக்கமின்றி அலைக்கழிக்கிறான். ஆனால் ராமனோ, அவன் தாய் கெளசல்யை ஆகட்டும், சீதை ஆகட்டும், கைகேயி, சூர்ப்பனகை என்று எல்லோரிடமும் கருணை காட்டினான். அவர்களனைவரையும் மதித்தான். கண்ணனைப்போல், ஆஸ்ரித விரோதிகளை வதம் பண்ணுவதில் ராமனும் மிகுந்த வேகம் கொண்டவன. அதனால் சினத்தினால், என்று அவனும் சினங்கொண்டு அழிக்கக்கூடியவன். சக்தியும் உண்டு. கருணையும் உண்டு. ஆகவே அவனைப்பாடுவோம் என்றார்களாம்.
• இலங்கைக் கோமான் என்று சொல்லும்போது, ராவணன் சக்தியை நினைத்துப்பார்க்கிறாள். ராவணன் மூன்றரைக்கோடி ஆண்டுகள் வாழ்ந்ததாக இதிகாசம் சொல்லும். அதிலும் அவன் தவமியற்றி சிவபெருமானை தரிசிக்கும் அளவுக்கு சிறந்த சிவபக்தன். நவக்கிரகங்களையும் காலில் போட்டு மிதித்தவன். குபேரனின் ஐஸ்வர்யத்தை கொள்ளை அடித்து அவனை துரத்தியவன். இப்படி தன் பலத்தால் பல பெருமைகள் கொண்டும், அகந்தையால் அழிந்தான். சிவபெருமானையே அசைத்துப்பார்க்க நினைத்து சிவபெருமானின் கால் விரலுக்கு ஈடாகமாட்டோம் நாம் என்பதை அவன் அறிந்தும் அகந்தையை குறைத்துக்கொள்ளவில்லை. ராமன் வந்து நிராயுதபாணியாக நிறுத்தி உயிர்ப்பிச்சை கொடுத்தும் அவனுக்கு அகந்தை போகவில்லை. ராமன் ஏன் அவனை ஒரே பாணத்தில் கொல்லவில்லை?, அவனுக்கென்ன கொஞ்சம் கொஞ்சமாக அழிப்பதில் ஒரு க்ரூர திருப்தியா? என்றால், அப்படியல்ல… இப்போதாவது திருந்துவானா என்று ஒவ்வொரு சண்டையிலும் அவனுக்கு சந்தர்ப்பம் கொடுத்து சரணாகதி செய்ய நேரம் கொடுத்துப்பார்க்கிறான் ராமன். அப்படியும் திருந்தாமல் வணங்காமுடியாகவே அழிந்ததால் கோமான் என்று குறிப்பிடுகிறாள்.
• இராமாவதார செய்தி சொல்லும் 2 ஆவது பாசுரம் . யோகபஞ்சகத்தின் கீழ் அமைந்த இப்பாசுரத்தில் கர்மயோகம் பற்றிச் சொல்லப்படுகிறது.
• அவரவர்க்கு விதிக்கப்பட்டிருக்கும் கர்மங்களை, கடமைகளை (நித்ய நைமித்திக போன்றவைகளை ) எந்தவித சுயநலமும் கருதாமல், நான் செய்கிறேன் என்ற அகந்தையில்லாமல் , எனக்காகச் செய்கிறேன் என்ற பற்றுதலில்லாமல் (மமதை) இதற்காகச் செய்கிறேன் என்று பலன் கருதாமல் (பேர்,புகழ்,செல்வம்) இறைச் சிந்தனையோடு பலனெதிர் பாராமல், பற்றின்றி செய்வதே கர்மயோகம். இதைத் தொடர்ந்து செய்வதினால், பிறவுயிர்களின் மீது கருணை பிறப்பதோடு, உள்ளத் தூய்மையும் அமைதியும் வாய்த்து, தன்னையும் (சீவாத்மா) தெரிந்து கொண்டு , இறைவனையும் (பரமாத்மா ) அடைய முடியும் (வீடுபேறு).


• இந்த பாசுரத்தில் நற்செல்வன் என்பதன் மூலம் தொண்டரடிப்பொடியாழ்வாரைத் துயில் எழுப்புவதாக ஸ்வாபதேச வ்யாக்யானத்தில் ஒன்னான வானமாமலை ராமாநுச ஜீயர் அருளிச் செய்தார்.

||திருப்பாவை ஜீயர்||

இப்பாட்டில் நற்செல்வன் என்பது ஸ்வாமி ஸ்ரீராமாநுஜரைக் கருதியே ஆகும். நற் செல்வன் என்பதை வடமொழியிற் கூற வேண்டுமானால், "லக்ஷ்மி ஸம்பந்ந: "என்பதாகும். ஸ்ரீராமாயணத்தில் லக்ஷ்மணோ லக்ஷ்மி ஸம்பந்ந: எனப்பட்ட இளைய பெருமாள் லக்ஷ்மணன் அன்றோ, இளையாழ்வார் இராமாநுஜராய் திருவவதரித்தார். அவர் "அஹம் ஸர்வம் கரிஷ்யாமி" என்று விபவ அவதாரத்திலே அடிமை செய்யப்பட்டார். இவர் "நித்ய கிங்கரோ பவாநி" என்று அர்ச்சாவதாரத்திலே ஒப்புயர்வற்ற அடிமைகள்
செய்யப் பெற்றார்.



[ஸ்வாமி ஸ்ரீராமாநுஜரின் அவதார ஸ்தலமான ஸ்ரீபெரும்பூதூரில இப்பாசுரம் இரண்டு சேவிப்பர். பூர்வாச்சார்யார்களும் தங்கள் வ்யாக்யானங்களின் நடுவே எம்பெருமானாரை பிரஸ்தாவித்திருக்கும் பாசுரம் இது]



ஸ்ரீஆண்டாள் திருவடிகளே சரணம்!
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்!!

தொடர்ச்சி  அடுத்த பதிவு - Post ல  பார்ப்போம்.

 அன்புடன்

ஸ்ரீ பா ல சு பி க் ஷ ம்
E.P.I. இராம சுப்பிரமணியன்


Comments

Popular posts from this blog

சிறுதெய்வங்களோடு வந்த பெருந்தெய்வங்கள் (பகுதி-1)

காலந்தோறும் மதுரை (பகுதி − 1)

கோதையின் கீதை (பகுதி - 33)