கோதையின் கீதை (பகுதி - 5)



பன்னிரண்டாவது நூற்றாண்டின் முன்பாதியில் பகவத் ஸ்ரீராமானஜரால் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர் காலத்திலேயே வைணவ ஆச்சாரியாராக "ஸ்ரீபராசர பட்டர்" என்பவர்
ஆக்கப்பட்டார். அவரைப் பற்றிய ஓர் கதைச் சம்பவத்தினை முன்னுரையாக கொண்டு 'கோதையின் கீதை' (பகுதி-5) கட்டுரை தொடர்கிறது.

பகவத் ஸ்ரீராமானுஜரின் ப்ரதான சிஷ்யர்  கூரத்தாழ்வான் ஆவார். ஒரு நாள் திருவரங்கத்திலே கூரத்தாழ்வான் உஞ்ச வ்ருத்திக்கு சென்ற போது  மழை பெய்து அவரால் அன்று எந்த தான்யங்களையும் எடுத்துவர முடியாததால் , கூரத்தாழ்வானும், கூரத்து ஆண்டாளும் உணவருந்தாமலேயே அன்றிரவு உறங்கச் சென்றுவிட்டனர். அந்த வேளையில்  பெரிய பெருமாளுக்கு, அன்றிரவு தளிகை கண்டருளப்பண்ணும் மணி ஓசையை அவர்கள் கேட்கின்றனர். அப்போது கூரத்து ஆண்டாள் எம்பெருமானை  நோக்கி “இதோ உமது பக்தரான ஆழ்வான் பிரசாதம் இன்றி இருக்க தேவரீர் அங்கு கூடிக்குலாவி போகம் கண்டருள்கிறீர் ” என்று நினைத்தாள். இதை உணர்ந்த பெரிய பெருமாள் உத்தம நம்பி மூலம் தமது பிரசாதங்களை வாத்யம், சத்ரம் (குடை), சாமரம் உள்ளிட்ட சகல விருதுகளோடு ஆழ்வானுக்கும் அவர் தேவிகளுக்கும் அனுப்புகிறார்.அதில் மூன்றில் ஒரு பங்கை தான் உண்டு மீதி இரண்டு பங்கை தன் மனைவியான கூரத்து ஆண்டாளை உண்ணச் செய்தார் ஆழ்வார்.
              காலக்கிரமத்தில் கூரத்து ஆண்டாள் இரு மகவை ஈன்றெடுத்தாள். இராமானுசர் தன் குருவான ஆளவந்தாருக்கு செய்துக்கொடுத்த இரண்டாம் வாக்கின்படி 'விஷ்ணுப்புராணம்' பாடிய பராசர முனிவரின் பெயரும், பாகவதம் பாடிய வேதவியாசரின் பெயரும் விளங்கும் வண்ணம் கூரத்தாழ்வரின் மகன்கள் முதலாமவருக்கு "பராசர பட்டர்" என்றும், இளையவருக்கு "வேத வியாச பட்டர்" என்றும் பெயரிட்டார்.
               எம்பெருமானார் கூரத்து ஆழ்வானை, ஸ்ரீபராசர பட்டரை பெரிய பெருமாளின் ஸ்வீகார புத்திரராய்த் தரும்படி நியமிக்க, ஆழ்வானும் அவ்வண்ணமே செய்தார். ஸ்ரீரங்கநாச்சியார் தானே பட்டரைத் தமது சந்நிதியில் வைத்துப் பார்த்துக்கொண்டார்.
             பராசர பட்டர் வளர்ந்து பெரியவராகி எம்பெருமானார் விருப்பப்படி அவருக்குப் பின்பு  தரிசன நிர்வாகத்தை ஏற்றுத் திருவரங்கத்தில் செவ்வனே நடத்தி வந்தார்.
               ஒரு முறை திருவரங்கத்தில் உறியடி உத்சவத்தில் பட்டர் வேத பாராயண கோஷ்டியை விட்டு விலகி இடையர்களோடு சென்று நின்றார். இதை பற்றி விசாரித்ததற்கு "அந்நாள் இடையர்களுக்காக ஏற்பட்ட உத்சவ நாள் ஆன படியால் பெருமாளின் கடாக்ஷம் அவர்கள் மீதிருக்கும் என்றும் பெருமாள் கடாக்ஷம் இருக்கும் இடத்திலே நாம் இருத்தல் வேண்டும்" என்றும் சொன்னாராம்.  அவ்வாறு திருவரங்கப்பெருமாள் உகக்கும் இடைச்சாதியின் நடை, உடை, பேச்சு ஆகியவற்றை ஏற்றுக்கொண்டு நோன்பிருந்த கோதை ஆண்டாளின் திருப்பாவையை ஒருநாள் ஸ்ரீபராசரபட்டர் காலட்சேபம் சாதித்து முடித்தபின் சிஷ்யர்கள் அவர் ஸ்ரீபாத தீர்த்தத்தைப் பிரசாதமாக வாங்கிக்கொண்டு சென்றார்கள். [ஸ்ரீபராசர பட்டர் தன் இல்லத்தில் தினமும் ஆழ்வார்கள் அருளிச்செயல்களின் காலட்சேபம் சாதிப்பார்.]
இதைக் கவனித்துக்கொண்டிருந்த ஸ்ரீபராசர பட்டரின் தாயார் கூரத்து ஆண்டாள், தனக்கும் ஸ்ரீபராசரபட்டரின் ஸ்ரீபாத தீர்த்தப் பிரசாதம் வேண்டும் என்று பிரியப்பட்டார். தாம் சென்று கேட்டால் பட்டர் மறுத்துவிடுவார் என்பதால் அங்கேயிருந்த சிஷ்யன் ஒருவனிடம் வாங்கி வரச்சொல்லி அதை ஸ்வீகரித்துக்கொண்டார்.
இதைக் கவனித்த ஸ்ரீபராசரபட்டர் கலங்கினார். “மகனுடைய ஸ்ரீபாத தீர்த்தத்தைத் தாய் எடுத்துக்கொள்ளுவது தகுமோ?” என வினவினார். அதற்கு ஆண்டாள் சொன்ன பதில், “சிற்பி பெருமாள் சிலையை வடிக்கிறார் என்பதால் அவர் அதை வணங்காமல் இருப்பாரா? அதே போல்தான் நான் உன்னைப் பெற்ற தாயாக இருந்தாலும் ஆண்டாள் அருளிய திருப்பாவையைச் சொன்ன உன் ஸ்ரீபாத தீர்த்தத்தை எடுத்துக்கொண்டேன்.” என்றாளாம்.
• கோதை ஆண்டாள் அருளிய திருப்பாவைக்கு சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஆசாரியர்கள் கொடுத்த முக்கியத்துவத்தை 'ஸ்ரீவைஷ்ணவ குரு பரம்பரைக்கதை' களில் உள்ள இக்கதை மூலம் நாம் அறியலாம்.



ஆண்டாள் தான் பாடிய திருப்பாவைப் பாசுரங்களில், பகவானின் பல அவதாரங்களையும் குறிப்பிட்டுப் பாடி இருக்கிறாள். திருப்பாவையின் மூன்றாவது பாசுரத்தின் முதல் அடியில், 'ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி' என்று ஆண்டாள் குறிப்பிட்டு இருப்பது பகவானின் வாமன அவதாரத்தைத்தான் என்று பலரும் நினைக்கலாம். தன்னையும் தன்னுடைய தோழிகளையும் கோபிகைகளாக பாவித்து, பகவான் கண்ணனின் அருளைப் பெற நோன்பிருந்து பாடிய பாசுரங்கள் தான் திருப்பாவை பாசுரங்கள்.

'ஓங்கி உலகளந்த உத்தமன்' என்று ஆண்டாள் குறிப்பிட்டு இருப்பது பகவான் கண்ணனைத் தான்.  அதனை எப்படி என்று பார்ப்போம்.  பகவான் வாமனனாக வந்தபோது, சூழ்ச்சியினால் தான் மகாபலியிடம் மூன்றடி யாசகமாகக் கேட்டார். தான் சொல்லியும் கேட்காமல் தானம் கொடுக்க மகாபலி முற்பட்டபோது, வண்டின் உருவம் கொண்டு கமண்டலத்துக்குள் புகுந்துகொண்டு தடுக்க முயற்சி செய்த சுக்ராச்சாரியாரின் ஒரு கண்ணை தன் தர்ப்பை நுனியால் சேதப்படுத்தவும் செய்தார். அப்படி சூழ்ச்சியினால் யாசகம் பெற்ற வாமன அவதாரத்தை எப்படி உத்தமன் என்று ஆண்டாள் குறிப்பிட்டு இருப்பாள்?
சரி, பகவான் கிருஷ்ணரை 'ஓங்கி உலகளந்த உத்தமன்' என்று அழைப்பது எப்படி பொருந்தும் என்று பார்ப்போம்.
ஓங்கி உலகளந்த என்றால், ஓங்கி உயர்ந்து தன் திருவடிகளால் உலகத்தையே அளப்பது என்பது மட்டுமே பொருள் இல்லை. பிரபஞ்சம் எங்கும் வியாபித்து இருப்பதும்கூட ஆகும். அதாவது விஸ்வரூபம் என்பார்களே அதுவும்கூட உலகத்தை அளந்தது போலத்தான். அப்படி பகவான் கிருஷ்ணர் பிரபஞ்சத்தையே தம்முள் அடக்கியவராக பலமுறை காட்சி தந்திருக்கிறார். எனவே, ஓங்கி உலகளந்த உத்தமன் என்று நம் அன்னை கோதை ஆண்டாள், பூர்ண அவதாரமான  கண்ணனையே
பாடியிருக்கிறாள் என்றும் ஓர் கருத்துண்டு.
மேலும் அப்பாசுரத்தின் கருத்தினை அறியலாம் வாருங்கள்.


* திருப்பாவை பாசுரம் -   3

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி
        நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீராடினால்
        தீங்கின்றி நாடெல்லாம் திங்கள்மும் மாரிபெய்து
        ஓங்குபெருஞ் செந்நெ லூடுகய லுகள
        பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப,
        தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி
        வாங்கக் குடம்நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்
        நீங்காத செல்வம் நிறைந்தேலோ ரெம்பாவாய்!

[மூன்று உலகத்தையும் தன் காலால் அளந்த திருவிக்கிரமனின் நாமங்களைப் பாடி
நாம் நோன்பிற்கு நீராடினால்
நாடு முழுவதும் தீமை இல்லாமல் மாதம் மூன்று முறை மழை பெய்யும். அதனால்
செந்நெல் வளர, நடுவே கயல் மீன்கள் துள்ளி விளையாடும்.
அழகிய நெய்தல் பூக்களில் வண்டுகள் உறங்கிக்கிடக்கும்.
அத்தகைய செழிப்பில், பெரிய பசுக்கள் வள்ளலைப்போல் குடம் குடமாக பாலை நிறைக்கின்றன.
"ஓங்கி உலகளந்த உத்தமனின் பெயரை சொல்லி பாடி நீராடி நோன்பிருந்து இத்தகைய செல்வங்களை எந்த நாளும் விட்டு நீங்காமல் பெற்று நிறைவோம்" என்று ஆண்டாள் பாடுகிறாள்.]     

 • தங்கள் நோன்பாலே பலிக்கும் பலம் இப்பாட்டில் சொல்லப்படுகிறது. முதற்பாட்டில் 'நாராயணனே' என்று ஸ்ரீவைகுண்டத்திலிருப்பு அனுபவிக்கப்பட்டது. இரண்டாம் பாட்டில் அவதாரம் செய்வதற்காகத் திருப்பாற்கடலில் சாய்ந்தருளின படியை அனுபவித்தார்கள். மூன்றாவதான இப்பாட்டில் திருவிக்கிரமனாக அவதரித்து திருஉலகளந்தருளின விருத்தாந்தத்திலே ஈடுபடுகிறார்கள்.

(ஓங்கி) திருப்பாற்கடலில் ப்ரஜைகளை ரக்ஷணம் செய்யப்பெறாமையாலே பனிப்பட்ட மூங்கில் போலே சாய்ந்து கிடந்தவன். மஹாபலியாலே நோவுபட்ட தேவர்களின் கூக்குரல் கேட்டவுடன் சூர்யஒளி பட்ட மூங்கில் போலே ஓங்கியபடி என்பர் பூர்வர்கள்.

"இந்திரன் கண்ணீர் கண்டு சிறாம்பின படியும், மஹாபலி நீர் வார்த்தவாறே வளர்ந்தபடியும்" என்கிறது ஆறாயிரப்படி வ்யாக்யானம்.  அதாவது இந்திரன் கண்ணீரைக் கண்டு எம்பெருமான் வருந்தி வாமனனாகச் சுருங்கினான். மஹாபலி நீர் வார்த்தவுடன் உண்டான ஆனந்தத்தாலே திருவிக்கிரமனாக வளர்ந்தான் என்று தாத்பர்யம்.  "ஸதைகரூபரூபாய" என்கிறபடியே விகாரமற்றதான அப்ராக்ருத சரீரமன்றோ விகாரத்தை அடைந்தது. ஸம்ஸாரிகளின் விகாரம் கர்மானுகுணமாகையாலும், தமக்காக
ஆகையாலும் தோஷத்தைக் கொடுக்கும். இவனுடைய விகாரம் க்ருபையினாலேயாகையாலும், பிறர்க்காக ஆகையாலும் குணத்தைக் கொடுக்கும்.

(உலகு அளந்த) "தன் செல்லாமையாலே, விலக்காமையே பற்றாசாக வஸிஷ்ட சண்டாள விபாகமற உலகெல்லாமளந்தவனன்றோ இவன்" என்கிறார்கள். "அடிச்சியோம் தலைமிசை நீ அணியாய் ஆழியங்கண்ணா! உன் கோலப்பாதம்"என்று ஞானிகள் ஆசைப்பட்ட திருவடிகள் கொண்டு காடுமேடெல்லாம் அளப்பதே என்று ஈடுபடுகிறார்கள். உறங்குகிற குழந்தையை அணைத்துக் கிடந்து உகக்கும் தாயைப் போலே இவற்றை அளப்பதைத் தன் பேறாக நினைத்திருக்கிறான் எம்பெருமான். இந்த குணாதிக்யத்தாலேயே வேதங்களும், வைதீகர்களும், ஆழ்வார்களும் இச்செயலிலே ஈடுபட்டனர். அதிமானுஷசேஷ்டிதங்களாலும்,  ஆச்ரித பக்ஷபாதத்தாலும், வடிவழகினாலும், வாத்ஸல்யத்தாலும் கிருஷ்ண அவதாரத்தோடு ஒத்திருக்கையாலே, ஸ்ரீவாமன அவதாரத்தை அனுபவிக்கிறார்கள்.


(உலகளந்த உத்தமன்) இசையாதார் பக்கல் மேல் விழுமவன், இசைந்தார் பக்கல் மேல் விழச் சொல்ல வேணுமோ? என்கிறார்கள்.
(உத்தமன்)  உலகளந்ததை இவர்களுக்கு உபகாரம் செய்ததாக எண்ணாமல், தன் பேறாக நினைத்திருப்பவன்.

ஒரு ப்ரயோஜனமுமில்லாமல் பரஹிம்சை செய்பவன் அதமாதமன். பரஹிம்சையினால் வயிறு வளர்ப்பவன் அதமன். "பிறரும் ஜீவிக்க வேணும் தாமும் ஜீவிக்க வேணும்" என்றிருக்குமவன் மத்யமன். தன்னை  அழித்தாவது பிறர்க்கு உதவுபவன் உத்தமன். ஸகலபலப்ரதனான இவன் தன் ஸ்வரூபத்தை அழித்து யாசகனாக மாறி த் தன்னையடைந்தார்க்கு உதவினானாகையால் இவனே உத்தமனெனத் தகுந்தவன்.

"ந தே ரூபம் ந  சாகாரோ நாயுதாநி ந சாஸ்பதம்|"
[உன்னுடைய ஸ்வரூபமும், திவ்யமங்கள விக்ரஹமும், ஆயுதங்களும், இருப்பிடமும் உனக்கல்ல; பக்தர்களுக்காகவே!]
என்றல்லவோ ஜிதந்தே ஸ்தோத்திரத்தில் சொல்லப்பட்டது.

(உலகளந்த உத்தமன்)  தனக்காகவும், தனக்கும் பிறர்க்காகவுமிராதே, தென்றலும்,நிலவும் போலே பிறர்க்கேயாயிருக்கை;
உலகளந்த வ்ருத்தாந்தத்திலிருந்தே இவன் ஸர்வாதிகனென்று தெரிகிறது. உயரச்சென்ற திருவடியை ஒருவன் கழுவினான்; மற்றொருவன் அந்த ஸ்ரீபாத தீர்த்தத்தை தலையிலே தரித்தான். இம்மூவரில் எவன் உத்தமனென்று சொல்லவும் வேண்டுமோ? எல்லாருடைய தலைகளில் கால்களை வைத்தவன் உத்தமனோ? திருவடியின் கீழே துகையுண்டவர்கள் உத்தமரோ?

(உத்தமன் பேர் பாடி) இவனுடைய ஸர்வாதிகத்வத்தையும், ஸௌலப்யத்தையும், வாத்ஸல்யத்தையும் மற்றுமுள்ள குணங்களையும் காட்டும் திருநாமங்களைப் பாடி, என்பர் பூர்வர்கள்.

முதற்பாட்டில் 'நாராயணன்' என்கையாலும், இரண்டாம் பாட்டில் 'பரமன்' என்று அத்திருநாமத்தின் அர்த்தத்தை அநுஸந்திக்கையாலும், இந்த மூன்றாம் பாட்டில் அத்திருநாமத்தில் சொல்லப்பட்ட வ்யாப்தியை நினைவுறுத்தும் திருவிக்ரம வ்ருத்தாந்தத்தை அநுஸந்திக்கையாலும், இங்கு உத்தமன் பேர் என்று [நாராயண] பெரிய திருமந்திரத்தை சொல்லுகிறது.

(உத்தமன் பேர்) பிறரைக்காட்டிலும் அவன் மேலானவனாய் இருப்பது போல், அவனைக் காட்டிலும் அவன் திருநாமம் உத்கிருஷ்டமாய் இருக்கிறது. கட்டிப்பொன் போலே அவன்; பணிப்பொன் [ஆபரணம்] போலே அவன் திருநாமம். அவன் இல்லை செய்பவர்களும் திருநாமம் கொண்டு காரியம் கொள்ளுவர். நாஸ்திகர்களும் வ்யாதி முதலியவை நீங்குவதற்காகத் திருநாமத்தைச் சொல்லுவதுண்டன்றோ?  தாயை அடிக்கும் தடியனும் கைநொந்தால் "அம்மா" என்றல்லவோ சொல்லுவான்.  திருநாமம் சொல்ல ஒரு யோக்யதை ஸம்பாதிக்க வேண்டாம். இதுவே எல்லா யோக்யதையையும் பண்ணிக் கொடுக்க வல்லது.   

(பேர் பாடி) திருநாமத்தைச்  ஸ்வயம் ப்ரயோஜனமாகப் பாடி சிலர் திருநாமத்தை சூத்ர புருஷார்த்தங்களைப் பெறுவர். அவர்கள் முத்தைக் கொடுத்து பாக்கு  வாங்குபவர்களை ஒப்பர். சிலர் திருநாமத்தைக் கொண்டு மோட்சத்தைப் பெறுவர். அவர்கள் முத்தை விலைக்கு விற்கும் வியாபாரிகளைப் போன்றவர்கள். சிலர் திருநாமத்தை ஸ்வயம் ப்ரயோஜனமாகப் பாடுவர். அவர்கள் முத்தை ஸ்வயம் ப்ரயோஜனமாக அணியும் அரசர்களைப் போன்றவர்கள். 

(பேர் பாடி) இந்திரன் இழந்த பூமியை அடைந்தான்; மஹாபலி பூமியை இழந்தான். இச்செய்கைக்குத் தோற்று பல்லாண்டு பாடினார் யாருமில்லை. அக்குறை தீர இன்று பல்லாண்டு பாடுவோம் என்கிறார்கள். திருநாமத்தை ஆர்வத்துடன் பாடினர்.  "ஆர்வத்தால் பாடாதார் பாட்டொன்றும் பாட்டல்ல" [பெரிய திருமொழி (11-7-4)] என்று திருமங்கையாழ்வாரும் பாட்டின் லட்சணத்தை பாடியுள்ளார்.

(நாங்கள்) திருநாமத்தை வாயாலே சொல்லாவிடில் உயிர்தரிக்கமாட்டாத நாங்கள். நெஞ்சைக் காவலிடுகிற ஊரில்  வாயாலே பாடப்பெற்ற நாமே பாக்யவதிகள் என்று தங்களைக் கொண்டாடுகிறார்கள். பாடி மடியேற்காத நாங்கள்; பாடி-நெய்யுண்ணோம் என்றவர்களன்றோ?

(நம் பாவைக்குச் சாற்றி..)
ஊரிலுள்ளார்க்கு 'நோன்பு' என்று ஒரு வ்யாஜத்தை இட்டு  கிருஷ்ணனுடன் கூடினால்.
ப்ராப்யமும் ப்ராபகமும் கிருஷ்ணனேயான நம்முடைய நோன்புக்கு. அவனுக்கும் நமக்குமுள்ள ஸம்பந்தத்தை அறிந்து அவனை அநுபவித்தல்.

(நீராடினால்) வ்ரஹதாபம் போக குளித்தால்.

(தீங்கின்றி நாடெல்லாம்) இது முதல் நோன்பினால் ஊரார்க்கு ஏற்படும் பலன்களைச் சொல்லுகிறது.

"யத்ராஷ்டாக்ஷர ஸம்ஸித்தோ மஹாபாகோ  மஹீயதே |
ந தத்ர ஸஞ்சரிஷ்யந்தி வ்யாதி துர்ப்பி க்ஷதஸ்கரா:||"
[அஷ்டாக்ஷர ஸித்தியடைந்த மஹான் எவ்விடத்திலிருக்கிறானோ அங்கு வ்யாதி, பஞ்சம், திருடர்கள் முதலியவர்கள் ஸஞ்சரிப்பதில்லை.] என்று சொல்லப்பட்டிருக்கும் போது  அஷ்டாக்ஷர ஸித்தியடைந்தவர்கள் இவ்வளவு பேரிருக்கும் அந்நாட்டில் தீங்கின்றியிருப்பதைச் சொல்லவும் வேண்டுமோ?  "நாராயணனே.." என்று முதல் பாசுரத்திலேயே திருமந்திரத்தின் அர்த்தத்தை அனுபவித்தவர்களன்றோ இவர்கள்.

(திங்கள் மும்மாரி பெய்து) அதிக மழையும், வறட்சியுமில்லாமலிருக்கை. ஒன்பது நாள் வெய்யிலும் ஒரு நாள் மழையுமாயிருக்கை.
"நிகாமே நிகாமே ந: பர்ஜந்யோ வர்ஷதி"  [நாம் விரும்பிய போதெல்லாம் வருணன் மழையைப் பொழிவிக்கிறான்.] என்று வேதத்தில் சொல்லியபடியேயிருக்கை.

(ஓங்கு பெரும் செந்நெல்)
திருவுலகளந்தருளின ஸர்வேச்வரனோடு செந்நெற்பயிர்களும் ஓத்திருக்கின்றன. விடியற்காலையில் நட்டு சூர்யன் உச்சிப்பட்டவுடன் பார்த்தால் கைகவித்துப் பார்க்கவேண்டியிருக்கை. மாரீசன் பயத்தினாலே "ஸ்ரீராமனை மரங்கள் தோறும் பார்க்கிறேன்" என்றான். இவர்கள் அன்பினாலே பார்ப்பவற்றையெல்லாம் திருவிக்ரமனாகப் பார்க்கிறார்கள். "நிற்கின்றதெல்லாம் நெடுமால்" என்பவர்களன்றோ.
ஆகாசத்தை அளாவி நிற்பது மட்டுமோ? ஒரு கதிரே ஒரு செய் முழுதும் அடைக்கும்படியன்றோ பெருத்திருக்கின்றன. "செய்கொள் செந்நெலுயர் திருவண்வண்டூர்" என்று நம்மாழ்வார் அருளியது இங்கு அனுமதிக்கத்தக்கது.

(ஊடு கயல் உகள) திருவுலகளந்தருளின எம்பெருமானைக் கண்டு ஜாம்பவான் முதலிய. அநுகூலர்கள் ப்ரீதிக்குப் போக்கு விட்டு ஸஞ்சரித்தாற்போலே ஓங்கு பெருஞ் செந்நெல்லைக் கண்டு  கயல்கள் திரிகிறபடி.
"பள்ளச் செருவில் கயலுகள" என்றும் "வண்பொழிலினூடே வலங்கொண்டு கயலோடி விளையாடு நாங்கூர்" என்றும் திருமங்கையாழ்வார் அருளியதை அநுசந்திப்பது.

(ஊடு கயலுகள) வைரத்தூண்போலே  நெற்பயிர்கள் நிற்கையாலே நேரே ஸஞ்சரிக்கப்பெறாதே ஒருக்கடித்து உலாவுகின்றன.

(பூங்குவளைப் போதில்) பூத்த குவளைப் புஷ்பத்திலே; அழகிய குவளைப் பூவிலே; குவளைப்பூ அலர்ந்த காலத்திலே; என்றும் பொருள் கொள்ளலாம். குவளைப்பூவில் மது உண்பதற்காக வண்டுகள் செல்ல, கயல் ஊடே உகள, அதனாலே செந்நெல்லும் குவளையும் அசைய, தூங்கு மெத்தையிலே உறங்கும் ராஜபுத்திரர்களைப்போலே வாயில் மதுவோடே வண்டுகள் கண்வளருகிறபடி. இது வயலின் செழிப்பு. இனி ஊரின் செழிப்பைச் சொல்லுகிறது.

(தேங்காதே புக்கிருந்து) கையிலே மிகவும் பலமுள்ளவர்களும் இந்தப் பசுக்களை கறக்கப்புகுவதற்குத் தயங்குவார்கள். கறப்பதற்கென்று புகுந்துவிட்டால் பல நாட்களானாலும் பால் வற்றாதபடியன்றோ இருப்பது. இந்தப் பசுக்களின் பெருமையை அறிந்தவர்களாகையாலே கறக்கத் துணிவார் ஆருமில்லை. ஹனுமான் கடலைத் தாண்டுவதற்குத்  துணிந்தாற் போலே துணிந்து கறக்க வேண்டும் படியாயிருக்கிறது.

(தேங்காதே) முத்துக்கு முழுகுமவர்கள் கடலுக்கு பயந்து முடியுமோ?

(இருந்து) ஒரு தடவை கறப்பதற்கு புகுந்துவிட்டால் பின் எழுந்திருக்க மார்க்கமில்லை. பால் வற்றினாலன்றோ எழுந்திருக்கலாவது.

(சீர்த்த முலை)  முலைகளை விரல்களாலே பிடிக்கவொண்ணாது; இரண்டு கைகளாலும் அணைத்துக் கறக்க வேண்டும்படி கனத்திருக்கை.


(பற்றி வாங்க) வாங்க = வலிக்க; பற்றி இழுக்க என்று பொருள். வாங்க என்பதைக் "கை வாங்க" என்றும் பொருள் கொள்ளலாம். அதாவது ஒரு தடவை பற்றிக் கை விட்டால் பல குடங்களை நிறைக்கும் என்று தாத்பர்யம்.

(பற்றி வாங்கக் குடம் நிறைக்கும்) குடங்களை வாங்க வாங்க நிறைத்துக்கொண்டே இருக்கும் என்றும் பொருள் கொள்ளலாம். குடமிடாவிடில் பசுவின் குற்றமன்றே. இச்சையுடையவர்கள் ஸர்வேச்வரனைப் பற்றிப் பலம் பெறுவது போலே இப்பசுக்கள் விஷயத்திலும் ஆகும்.

(வள்ளல்)  முன்பு பால் தரும் பெருமையைச் சொல்லப்பட்டது. இங்கு சிறு பிள்ளைகளுக்கும் தன்னையே கொடுத்துக்கொண்டு நிற்கும் பெருமையைச் சொல்லுகிறது. கண்ணனுடைய ஸ்வபாவம் இவற்றுக்கும் உண்டாகியிருக்கிறது.  யாரேனும் இவன் கழுத்தில் ஓலை கட்டி "தூது போ" என்றால் போமா போலே. [கழுத்தில் ஓலை கட்டியவாறே பாண்டவர்களுக்காக கண்ணன் தூது போனான். அது பண்டைய முறை] அப்பசுக்களும் சிறுபிள்ளைகளுக்கும் கட்டவும் அடிக்கவுமாம்படி  தம்மைக் கொடுத்துக் கொண்டு நிற்கின்றன.


(பெரும்பசுக்கள்) புல்லும் தண்ணீரும் உணவாக வளர்ந்தவையன்றிக்கே, கண்ணனுடைய குழலோசையையும், ஸ்பர்சத்தையும் உணவாகக் கொண்டு வளர்ந்தவையாகையால் ஐராவதம் போலேயும், ஸ்ரீராமபிரானுடைய சத்ருஞ்ஜயனைப் போலேயும் பெருத்திருக்கின்றன.

(நீங்காத செல்வம் நிறைந்து)  அழிவில்லாத செல்வம் நிறைந்திடும் படி குடம் நிறைக்கும் என்று அந்வயம். ஓங்கியுலகளந்தவன் அளித்த செல்வமாகையாலே நீங்காதிருக்கிறபடி. புண்யத்தினால் வரும் செல்வமோ இது? ஸர்வேச்வரனுடைய க்ருபையினாவ் வரும் செல்வமோ இது? அவனுடைய செல்வத்துக்கும் காரணமான பிராட்டியின் க்ருபையினால் வந்ததன்றோ.
"பாபாநாம் வாஸுபாநாம்  வா வதார்ஹாணாம்  ப்லவங்கம |
கார்யம் கருணமார்யேண ந சச்சிந்நாபராத் யதி||"
[வானர! பாபிகளாயிருந்தாலும், புண்யவான்களாயிருந்தாலும், கொல்லத்தக்கவர்களாயிருந்தாலும் அவர்கள் விஷயத்தில் குணவானாயிருப்பன் கிருபை செய்யவேண்டும். குற்றம் செய்யாதவர்கள் எவனுமில்லையே.] என்றவளுடைய [*சீதா லட்சுமி*] கடாக்ஷத்தாலே வந்ததாகையாலே  நீங்காத செல்வமாயிருக்கிறது.

•  பாசுர உள்ளுரை:

1. முதல் பாசுரத்தில் வைகுந்தநாதனான நாராயணனையும், 2வது பாசுரத்தில் பாற்கடலில் பையத்துயின்ற பரமனான வியூக மூர்த்தியையும் போற்றிப் பாடிய ஆண்டாள், இப்பாசுரத்தில் ஓங்கி உலகளந்த உத்தமன் ஆன விபவதார மூர்த்தியைப் பாடுகிறாள்!


 ஆண்டாள் நாச்சியார் இப்பாசுரத்தில், "உத்தமன் பேர் பாடி" என்று கூறுவது, பெருமாளின் புகழைப் பாடுவதை விட, அவனது திருநாமத்தைப் (அஷ்டாட்சர மந்திரம்) பாடுதல் தான் சிறந்தது என்ற உள்ளர்த்தத்தை உடையது!
2. முதல் பாசுரத்தில், •அஷ்டாட்சர மந்திரத்தையும், இரண்டாவது பாசுரத்தில் •த்வய மந்திரத்தையும் கொண்டாடிய ஆண்டாள், இம்மூன்றாம் பாசுரத்தில், • சரம சுலோகத்தின் (மாமேகம் சரணம் வ்ரஜ - மோக்ஷயிஷ்யாமி மாசுச ஹ) செய்தியை முன்னிறுத்துகிறாள் எனவும் பொருள் கூறுவர்.
3. நிலம் செழித்து, மக்கள் நலமுடனும், செழிப்படைந்து, மகிழ்ச்சியுடனும் வாழ மழை எவ்வாறு பொழிய வேண்டும் என்பது பற்றி அழகாக இப்பாசுரத்தில் "தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரிப் பெய்து" என்று சொல்லப்பட்டுள்ளது.
 9 நாட்கள் வெயில், 1 நாள் மழையென (ஒரு மாதத்தில்)  மூன்று நாட்கள் "மழை" பெய்ய வேண்டும் என்பது கருத்து.
4. 'சாற்றி நீராடினால்' என்பது சரணாகதி உபதேசத்தை உட்பொருளாகக் குறிக்கிறது.
5. 'மும்மாரி' என்பது மூன்று வகைப்பட்ட பகவத் காரியங்கள் வாயிலாக, நோன்பின் சரணாகதிப் பலனை பெற முடியும் என்பதை வலியுறுத்துகிறது. அதாவது,
அ) ஆச்சார்ய உபதேசம்
ஆ) திவ்யப் பிரபந்தப் பாசுரங்களைப் பாடுதல்
இ) திவ்ய தேசங்களுக்கு சென்று பரந்தாமனை வழிபடுதல்
6. "ஓங்கு பெருஞ்செல்நெல் ஊடுகயல் உகள" - செந்நெல் வயல்களில் துள்ளி விளையாடும் மீன்கள், தங்கள் உபதேசங்கள் பலனளிப்பதைக் கண்டு மகிழ்வுறும் ஆச்சாரியர்களை உட்பொருளாகக் குறிக்கிறது.
7. "பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப" என்பதில் சுட்டப்படும் வண்டு, அடியவர் நெஞ்சத்தில் (யோக நித்திரையில்) உறைந்திருக்கும் வைகுந்தப் பெருமானைக் குறிக்கிறது.
8. "தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி வாங்க" என்பது ஆச்சார்யனின் வாத்சல்யத்தால் ஈர்க்கப்பட்ட சீடர்களை உட்பொருளாகக் கொண்டுள்ளது.
9. "வள்ளல் பெரும்பசுக்கள்" தயாள குணம் உடைய, பிரதிபலனாக எதையும் எதிர்பார்க்காத ஆச்சார்யர்களைக் குறிக்கிறது.
10. "நீங்காத செல்வம்" என்பது (திருமகளின் பரிந்துரையின் பேரில், அடியவர்க்கு பெருமாள் அருளும்!) பூவுலகில் வாழும் காலத்தில், குன்றாத ஞானத்தையும், அதன் பலனால் கிட்டிய மோட்ச சித்தியையும் குறிக்கிறது. ஏனெனில், மற்ற எல்லா செல்வங்களும் நீங்கக் கூடிய செல்வங்கள் ஆகும் என்று பொருள் கூறுவர்.



ஓங்கி உலகளந்த உத்தமன் புகழைப் பாடி நீராடி, பாவை நோன்பு இருந்து வழிபட்டால், தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பொழியும். அதாவது எந்த ஒரு சேதத்தையும் பயிர்களுக்கோ, மனிதர்களுக்கோ, இதர ஜீவராசிகளுக்கோ ஏற்படுத்தாதபடி அளவோடு மழை பெய்யுமாம். அப்படி மழை வளத்தால் வயல்களில் செழித்து வளர்ந்திருக்கும் நெற்பயிர்களின் ஊடாக தேங்கி இருக்கும் நீரில் மீன்கள் துள்ளி நீந்தியபடி இருக்குமாம். தேன் நிறைந்த பூக்களில் எல்லாம் தேனைப் பருகுவதற்காக திரிந்துகொண்டிருக்குமாம். வீடுகளில் கட்டப்பட்டு இருக்கும் பசுக்கள்கூட, தங்கள் கன்றுக்கு ஊட்டியது போக, கறப்பவர்களுக்கு அவர்களுடைய குடம் நிறையும்படி பாலமுதைப் பொழியுமாம். கண்ணன் மீதான பக்தியானது இப்படியான வளங்களையும், நீங்காத செல்வங்களையும் நமக்குத் தருமாம். நீங்காத செல்வம் என்று ஆண்டாள் குறிப்பிடுவது, வாழ்க்கையின் சுகபோகங்களை மட்டுமல்ல, நிறைவானதும் அதற்கு மேல் எதுவும் இல்லாததுமான "கண்ணபெருமானின் திருவடிகள் என்னும் செல்வத்தையே" ஆண்டாள் நீங்காத செல்வம் என்று சிறப்பித்துக் கூறுகிறாள்.


• அந்த பரமனின் கருணையால் ப்ரபன்னர்கள் மத்தியில் ஞானம் ஓங்கி வளர்ந்த பயிரைப்போல் செழித்து இருக்கிறது.
• அதில் ஆசார்யர்களை அண்டிய சிஷ்யர்கள், துள்ளும் கயல்களைப்போலே அந்த ஞானம் தந்த இன்பத்தினால் களிப்பர். ஆசார்யர்கள் மிகுந்து ஞானம் தழைத்திருப்பதால் குவளைப்போதில் துயின்ற வண்டைப்போல், பாகவதர்களின் ஹ்ருதய கமலத்தில் அந்த பரமன் உறங்குகிறான்.
• அத்தகைய செழிப்பில், பெரிய பசுக்கள் வள்ளலைப்போல் குடம் குடமாக பாலை நிறைக்கின்றன. அவைகளின் மடி பெருத்து இருப்பதால் ஒரு கையால் பாலைக்கறக்க இயலாது. முலை ‘பற்றி’ என்று இருகைகளாலும் பசுக்களின் மடியை பற்றித்தான் பாலை கறக்க முடியும்.



• இங்கே பசுக்கள் ஒரு உருவகம். அந்த பகவானின் உருவகம். வள்ளன்மை அவன் குணம். அவன் எவ்வளவு கொடுத்தாலும் குறைவில்லாத வள்ளல். அத்துடன் பாலை கன்று குட்டிகளும், இடையர்களும் கொள்ளாவிடில் பசு எப்படி தவியாய் தவிக்குமோ அதுபோல் பரமனும் ஜீவாத்மாக்கள் அவனை கொள்ளாவிடில் தவித்து போகிறான். ஜீவாத்மாக்கள் முக்தி பெற்று அவனை எவ்வளவு அனுபவிக்கிறார்களோ அதே போல் அவனும் அவர்களை கொண்டு சுகிக்கிறான் என்பது தேறும்.
• ஓங்கி உலகளந்த உத்தமனின் பெயரை சொல்லி பாடி நீராடி நோன்பிருந்து இத்தகைய செல்வங்களை எந்த நாளும் விட்டு நீங்காமல் பெற்று நிறைவோம் என்று ஆண்டாள் மங்களாசாசனம் செய்கிறாள். இவ்வாறு இங்கே உருவகங்களாக சுட்டப்படுகிறது

|திருப்பாவை ஜீயர்|

"மண்மிசை யோனிகள் தோறும் பிறந்து", "ஞானங்கனிந்த நலங்கொண்டு"  இத்தியாதிகளான நூற்றந்தாதி பாசுரங்களிற்படியே எம்பெருமானை விட ஓங்கி - அதிசயித்து , உலகத்தையெல்லாம் ஸ்வாதீனமாகக் கொண்ட. உத்தமர் ஸ்ரீராமாநுஜரொருவரே. ஒருவர்க்கும் ஒன்றுஞ் சொல்லாதவர் அதமர்.  நிர்பந்தத்தினால் சொல்லுபவர் மத்யமர். தம்முடைய கருணையினால் தாமே சொல்லுமவர் உத்தமர். "ஓராண்வழியா யுபதேசித்தார் முன்னோரென்கிற" உபதேச ரத்தின மாலையின் படி உத்தமர் ஸ்ரீராமாநுஜரொருவரே ஆவார்."மற்றொரு பேறு  மதியாது" என்கிற இராமாநுஜ நூற்றந்தாதி பாசுரத்தில்  உத்தமனாகவும் கூறப்பட்டுள்ளார். இது காஞ்சீபுரம் வித்வான் அண்ணங்கராச்சாரியார் ஸ்வாமிகள் அருளிச்செய்தது.


"மற்றொரு பேறு மதியாது, அரங்கன் மலரடிக்காள்
உற்றவ ரேதனக் குற்றவ ராய்க்கொள்ளும் உத்தமனை
நற்றவர் போற்றும் இராமா னுசனையிந் நானிலத்தே
பெற்றனன் பெற்றபின் மற்றறி யேனொரு பேதைமையே."
[இராமாநுஜ நூற்றந்தாதி பாசுரம் -  57]





ஸ்ரீஆண்டாள் திருவடிகளே சரணம்!
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்!!

தொடர்ச்சி  அடுத்த பதிவு - Post ல  பார்ப்போம்.

           அன்புடன்

     ஸ்ரீ பா ல சு பி க் ஷ ம்
E.P.I. இராம சுப்பிரமணியன்






Comments

Popular posts from this blog

சிறுதெய்வங்களோடு வந்த பெருந்தெய்வங்கள் (பகுதி-1)

காலந்தோறும் மதுரை (பகுதி − 1)

கோதையின் கீதை (பகுதி - 33)