கோதையின் கீதை (பகுதி -25)




🔶  திருஆடிப்பூரம் பிரம்மோற்சவம். 🔶

ஸ்ரீவில்லிபுத்தூர் கோதை ஸ்ரீஆண்டாள் திருக்கோயிலில் வைகானஸ ஆகம முறைப்படி
மொத்தம் 12 திருநாட்கள் திருஆடிப்பூர உற்சவம் நடைபெறுகிறது. வழக்கம் போல் திருப்பூர நந்தவனத்தில் ம்ருத்சங்க்ரஹணம் மற்றும் த்வஜஸ்தம்ப மண்டபத்தில் கொடி ஏற்றம், என சேனை முதலியார் புறப்பாட்டுடன் உற்சவம் தொடங்குகிறது.

🔹முதல் நாள்
அன்று இரவு ஸ்ரீஆண்டாள்-ஸ்ரீரங்கமன்னார் 16வண்டிச்சப்பரத்தில் திருவீதிப் புறப்பாடு கண்டருளுவர்.
🔹இரண்டாம் நாள்
இரவு ஸ்ரீஆண்டாள் - சந்திரப்ரபை வாகனம்;
ஸ்ரீரங்கமன்னார் - சிம்மவாகனம்;
🔹மூன்றாம் நாள்
இரவு ஸ்ரீஆண்டாள் - தங்கப்பரங்கி நாற்காலி       வாகனம்; ஸ்ரீரங்கமன்னார் - அனுமார் (சிறிய திருவடி ) வாகனம்;
🔹நான்காம் நாள்
இரவு ஸ்ரீஆண்டாள் - சேஷ வாகனம்;
ஸ்ரீரங்கமன்னார் - கோவர்த்தனகிரி;
🔹ஐந்தாம் நாள்
காலை ஐந்து பெருமாள் ஆண்டாளுடன் பெரியாழ்வாருக்கு மங்களாசாசனம் நடைபெறும்.
இரவு ஸ்ரீஆண்டாள் - அன்னவாகனம்;
ஸ்ரீரங்கமன்னார் உள்பட ஐந்து பெருமாள்களும் ஐந்து கருட சேவை நடைபெறும்.
🔹ஆறாம்  நாள்
இரவு ஸ்ரீஆண்டாள் - கனகதண்டியல்          வாகனம்; ஸ்ரீரங்கமன்னார் - யானை வாகனம்;
🔹ஏழாம் நாள்
இரவு ஸ்ரீஆண்டாள் மடியில் ஸ்ரீரங்கமன்னார்  சயன சேவை
🔹எட்டாம் நாள்
இரவு ஸ்ரீஆண்டாள் - புஷ்பப்பல்லக்கு;
ஸ்ரீரங்கமன்னார் - குதிரை வாகனம்
🔹ஒன்பதாம் நாள்  காலை திருவாடிப்பூரம் தேரோட்டம்;

🔹பத்தாம் நாள்  சப்தாவரணம்;
இரவு ஸ்ரீஆண்டாள் சிங்கம்மாள் குறட்டில் முத்துக்குறி உற்சவம்;         
🔹பதினொன்றாம் நாள் தீர்த்தவாரி
🔹பன்னிரண்டாம் நாள் விடையாற்றி.

🔶 ஒன்பதாம் திருநாளான திருவாடிப்பூரத்தன்று அதிகாலையிலேயே ஸ்ரீஆண்டாளும் ஸ்ரீரங்கமன்னாரும் பெரியதிருத்தேர் எழுந்தருளுகிறார்கள். இத்திருத்தேர் வானமாமலை ஜீயர் ஸ்வாமிகளால் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இத்தேரின் வடம் கோர்க்கும் ஒரு  இரும்பு வளையத்தில்,  "சாலிவாகன சகாப்தம், கொல்லம் 1025 வருஷம் [கி.பி.1825](சௌமிய வருடம்) ஆவணி மாதம் 14ம் தேதி, குருவாரம்" என்றெழுதப்பட்டுள்ளது. இத்தேரின் அமைப்பு அதிசயிக்கத்தக்கது. இத்தேரின் சக்கரங்கள் 4+4+1= 9 ஆகும். தேர்தட்டின் ஊன்று கால்கள் 81 ஆகும்.  (8+1= 9) இவற்றை எந்த வரிசையிலிருந்து பார்த்தாலும் ஒன்பது என்ற எண் வரும். தேரின் உள் பகுதியான அஸ்திவார அமைப்பில்  உள்ள தூண்கள் 144 ஆகும்.( 4+4+1= 9).
எண்கணிதசாஸ்திரப்படி, இத்தேரின் எப்பகுதியையும், குறுக்கு வசமாகவோ, நெட்டு வசமாகவோ, நடுவசமாகவோ, எப்படிக் கூட்டினாலும் ஒன்பது என்ற இலக்கம் வரும். அதே போல தேருக்கு வடமும் ஒன்பது ஆகும். இத்தேரில் ஒவ்வொரு தட்டின் பக்கவாட்டிலும், ஸ்ரீவில்லிபுத்தூர் தலபுராணச்செய்திகள், இராமாயண, மகாபாரதம் மற்றும் சைவ,வைணவ புராணக் காட்சிகள் உள்ளன.
160 அடி உயரமுள்ள இத்தேரில் மேல்பகுதியிலுள்ள கலசம் மட்டும் 150 கிலோ எடை கொண்டது என திருக்கோயில் பழைய தல வரலாற்றுப்புத்தகம் கூறுகிறது.  முற்காலங்களில் 15000 பேர் சேர்ந்து இழுத்தும் ரதவீதி சுற்றி நிலைக்கு வர சில நாட்கள் ஆகுமாம். ரதவீதி சுற்றி வந்த பிறகு ஸ்ரீஆண்டாள் ரங்கமன்னார் திவ்ய தம்பதியினர் சிங்கம்மாள் குறட்டில் எழுந்தருளுகிறார்கள். பின்னர் வெள்ளிக்கிழமை குறட்டில் உள்ள திருமலை நாயக்கர் சிலைக்கு மரியாதை செய்யப்படுகிறது. பிறகு சிங்கம்மாள் குறட்டிலிருந்து புறப்பட்டு திருவாடிப்பூர நந்தவனத்திலுள்ள திருப்பூர மண்டத்தில் எழுந்தருளுகிறார்கள்.



முந்தையப் பாசுரத்தால் ஸ்ரீகண்ணனுக்குத் தாங்கள் வந்திருப்பதை இடைச்சிகள்  உணர்த்திய பின் இப்பாசுரத்தில் அவனது சிம்ம நடையைக் காட்டியருள செய்ய ஸ்ரீஆண்டாள் வேண்டுகிறாள். இறைவன் அருளைத் தனியாக வேண்டக் கூடாது, அடியார்கள் அனைவரோடும் கூடியே இறையருளைப் பெறுதல் வேண்டுமென உணர்த்துகிறது இப்பாசுரம். கண் முன்னேயொரு சிங்கத்தை அழகுறக் கா
ட்டும் பாசுரம்.

இந்தப் பாடலில் இன்னொரு சிறப்பும் உள்ளது. பொதுவாகப் பெண்சிங்கம் தான் வேட்டையாடும். ஆனால் ஆண் சிங்கமும் வேட்டையாடும். எப்போது தெரியுமா? பெண் சிங்கத்தால் வேட்டையாட முடியாத பெரிய விலங்குகளாக இருந்தால் ஆண் சிங்கங்கள் வேட்டையாடும்.

வைணவ சம்பிரதாயத்தில் திருமகள் முக்தியளிக்க முடியாது. திருமாலவனிடம் பரிந்துரைதான் செய்ய முடியும். பரமபதம் அளிப்பது பரந்தாமன் அருள் மட்டுமே. அதனால்தான் பெண் சிங்கத்தால் முடியாத நிலையில் ஆண்சிங்கம் வேட்டைக்குப் புறப்பட்டு வந்தது. இங்கு வேட்டை என்று முக்தியளிப்பதை
சொல்லப்படுகிறது.

சென்ற பாடல் வரை திருமால் “கிடந்த”  அழகை இரசித்தவள், இந்தப் பாடலில் கிடந்த நடந்த நின்ற அமர்ந்த அழகையெல்லாம் இரசிக்கிறாள். இது திருநீர்மலை திவ்யதேசத்தினை (நின்றான், இருந்தான் கிடந்தான், நடந்தான்) நினைவு படுத்துகிறது.



திருப்பாவையின் 23-வது பாசுரம்

மாரி மலை முழைஞ்சில் மன்னிக் கிடந்து உறங்கும்
சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீ விழித்து
வேரி மயிர் பொங்க எப்பாடும் பேர்ந்து உதறி
மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்
போதருமா போலே நீ பூவைப்பூ வண்ணா! உன்
கோயில் நின்று இங்ஙனே போந்தருளிக் கோப்புடைய
சீரிய சிங்காசனத்து இருந்து யாம் வந்த
காரியம் ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்


[கார் காலத்தில் மலைக் குகையை தனது இருப்பிடமாக்கிக் கொண்டு உறங்கிக் கிடக்கும் பெருமை வாய்ந்த சிங்கமானது, தூக்கம் கலைத்து, தீப்பொறி பறக்க தனது சிவந்த விழிகளை திறந்து பார்த்து, மணமுள்ள தனது பிடறி முடி அலை பாயும் வகையில் உடலை நாற்புறமும் அசைத்து, நெட்டுயிர்த்து, பின் கம்பீரமாக நிமிர்ந்து கர்ஜித்து, குகையை விட்டுக் கிளம்புவது போல,

காயா மலர் நிறங் கொண்ட மாயக் கண்ணனான நீ, உனது திருமாளிகையை விட்டு இவ்விடம் வந்து, உனக்கேற்ற வகையில் உருவாக்கப்பட்ட பெருமை வாய்ந்த சிம்மாசனத்தில் அமர்ந்து, அதன் பின், நாங்கள் உனை நாடி வந்த செயலுக்கான காரணத்தை ஆராய்ந்து அருள வேண்டுமாய், பாவை நோன்பிருந்து வணங்கிக் கேட்கிறோம்! ]

** ** *






      • பாசுரச் சிறப்பு:-

• இப்பாசுரம் திருமாலின் ஐந்து நிலைகளில் விபவ நிலையான "ஸ்ரீநரசிம்ம அவதாரம்"  குறிக்கப்படுகிறது. (நரசிம்ம அவதாரம்) மற்ற அவதாரங்களுக்கெல்லாம் சற்று நேரம் எடுத்துக் கொள்ள முடிந்தது பரந்தாமனுக்கு. ஆனால் இந்த "நரசிம்ம அவதாரம்" நிகழ்த்துவதற்கு கால அவகாசம் நிரம்ப இல்லை. அந்த அவதாரமே 2 மணி நேரத்திற்கும் குறைவான பொழுதில் நிகழ்ந்து காரியம் முடித்த அவதாரம். அவசரகாலத்தில் வந்தாலும், அவசர கோலத்தில் வரவில்லை. யாராலும் கற்பனை செய்திருக்க முடியாத உருவத்தில் வெகு கம்பீரமாக வெளிப்பட்டு, அனாயாசமாக ஓர் சம்ஹாரத்தை முடித்துவிட்ட அவதாரம் இது.

• கிருஷ்ணாவதாரத்தில் கண்ணன் குழந்தையாய் வளர்ந்து, விளையாடி, வாலிபம் எய்தி, பின்னர் பாரதப் போரில் பெரும் பங்காற்றி நீதியை நிலைநாட்டுகிறான்.  இராமாவதாரமும் அப்படியே. ஆனால், நரசிம்மாவதாரத்தில் பெருமாள் தோன்றி, உடனே பேருருக்கொண்டு, இரணியனை அழித்து, பிரகலாதனுக்கு அருள் புரிந்து சென்றான். தோற்றத்தின் காரணம் மிகச்சிறிய காலத்திலேயே நிறைவடைகிறது. அதுபோல், நீ இராமனாகவோ, கண்ணனாகவோ எழுந்து வராமல், நரசிம்மனாய் வந்து, உடனே சிம்மாசனத்தில் எழுந்தருளி, எங்களின் கோரிக்கைகளை உடன் நிறைவேற்று. கால தாமதம் வேண்டாம் என்று ஆய்ச்சியர் வேண்டுவது போல் அமைந்துள்ளது பாசுரம்.

• இன்னொரு சுவை, கொடிய சீற்றத்துடன் துலங்கும் சிங்கம், தனது குட்டிகளிடம் அன்புடனே இருக்கும். அதுபோல், கொடிய இரணியனை வதம் செய்யும்போது கடுஞ்சினத்துடன் இருந்த நரசிங்கம், பிரகலாதனைப் பார்த்தவுடன் மனம் கனிந்துருகி அவனுக்கு அருள் மாரி பொழிந்து நின்றது. அதுபோல் நீயும் எங்களுக்கு அருள் புரிவாய் என்று ஆய்ச்சியர் வேண்டுகிறார்கள்.

• ஆண்டாள் திருப்பாவையின் முதல் பாசுரத்திலேயே, கண்ணனை சிம்மத்துடன் ஒப்பிட்டுப் பாடி விடுகிறார், "ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்" என்று. இப்பாசுரத்தில் அந்த கிருஷ்ண சிம்மத்தை, அவனது பெருமைக்குரிய சிம்மாசனத்தில் அமர்ந்து, தங்கள் தேவைகளையும், குறைகளையும் கேட்டு, ஆராய்ந்து பின் அருள் செய்யுமாறு ஸ்ரீஆண்டாள் நாச்சியார் வேண்டுகிறாள். இங்கு  இப்பாசுரத்தில் அவளின் கவிநயம் மிக அழகாக வெளிப்படுகிறது . விழித்தெழும் பரமனின் கம்பீரத்தையும், அவன் வீறு நடையையும் அற்புதமாக வர்ணிக்கிறாள் ஸ்ரீஆண்டாள்.

• இங்கே ஸ்ரீகண்ணனின் ஆளுமையையும், வலிமையையும் முன்னிட்டே, ஸ்ரீஆண்டாள் அவனை சிம்மத்தோடு ஒப்பிடுகிறாள். பிற இயல்புகளைச் சொல்ல, "பூவை பூவண்ணா" என்று விளிக்கிறாள். அதாவது ஸ்ரீகண்ணனை, "நீ காயாம்பூ நிறம் கொண்டவன் என்றும் நம் கோதை நாச்சியார் போற்றுகிறாள்.

• காயாம்பூவைப் போன்ற நிறம் படைத்தவனே! உன் கோயிலை விட்டு இங்கு வந்து, பரமபதத்திலே தர்மாதீபீடத்தில் அமர்ந்து பிரபஞ்சங்களுக்குத் தேவையானவற்றையெல்லாம் ஆராய்ந்து செய்து வருவது போல், நாங்கள் வந்த காரியங்களை ஆராய்ந்து, அருள் செய்யவேண்டும் என்று வேண்டுகோள் வைக்கிறாள் ஆண்டாள்.

• பரமபதத்தில் ஒரு கட்டில் உள்ளது. தர்மம், அறிவு, வைராக்கியம், நியமை, அதர்மம், அஞ்ஞானம், அழிவு, அநாச்சார்யம் (தண்டனை) எனும் எட்டு தத்துவங்களை உணர்த்தும் எட்டுக்கால்களை உடைய கட்டில் பீடம். அதற்கு தர்மாதீபீடம்" என்று பெயர். 
ஸ்ரீபகவான் தர்மாதீபீடத்தில் அமர்ந்துதான், அனைத்து பிரபஞ்சங்களுக்கும் தேவையானவற்றை ஆராய்ந்து அருள்பாலித்துக் கொண்டிருப்பார்.

 • பக்த பிரகலாதனுக்காக அவனுடைய வார்த்தையை மெய்ப்பிக்க வேண்டும் என தூணிலும் துரும்பிலும் நிறைந்திருந்த ஸ்ரீமகாவிஷ்ணு, ஹிரண்யகசிபு ஒரு தூணைக்காட்டி இங்கு உள்ளானா நாராயணன், என்று கேட்டு, அதை உதைத்ததுடன் உடனே நரசிம்மமாக அவதாரம் எடுத்து பிரகலாதனுக்கு அருள்பாலித்தார் ஸ்ரீநரசிம்மர்.
எனவேதான், ஆண்டாள் தம்மை சரணாகதி அடைந்தோருக்கு சிம்மத்தின் வேகத்தில் வந்து அருள்புரிவான் என உணர்த்துவதற்காக, சிம்மத்தின் நடையை இதில் மறைமுகமாக வைத்துள்ளார்.

• மேலும், இந்தப் பாடலை தினந்தோறும் பாடி வருவோருக்கு அவர்களின் கோரிக்கைகளை அதாவது நேர்மையான, நியாயமான கோரிக்கைகளை, பகவான் ஆராய்ந்து அருள் செய்வார் என்பது உறுதி. கேட்பவர்களுக்கு நன்மை யாதென்று தெரியாது. அதை அளிக்கும் பகவானுக்கு மட்டும்.  தாய் தன் குழந்தைகளுக்கு நன்மை பயப்பதையே அளிப்பது போல், நன்மையே அருள்வார் என்பதை சூசகமாகவும் நயமாகவும் சொல்லி உணர்த்திப் பாடுகிறாள் ஆண்டாள்!

• ஸ்ரீகண்ணனின் "கிடந்த" அழகை பார்த்தாகி விட்டது, அடுத்து அவனது "நடை"யழகை கோபியர் அனுபவிக்க வேண்டும் அல்லவா? அது தான், ஸ்ரீகண்ணனை அவனது திருமாளிகையை விடுத்து 'நடந்து' அரசவை மண்டபத்துக்கு வருமாறு இடைச்சியர் வேண்டுகிறார்கள். பக்தைகள் எல்லாம் மண்டபத்தில் இருக்கும்போது, பரமனும் அங்கு தானே எழுந்தருள வேண்டும்! என்ன ஒரு ரசம்!

• இடைச்சியர் கண்ணனிடம், "நீ எங்கள் குறைகளை பள்ளியறையில் வைத்து ஆராய்தல் சரியாகாது. நீ குருஷேத்திரத்தில் அர்ஜுனனுக்கு சொன்ன வார்த்தைகள் போல, ஸ்ரீராமனாக சேதுக்கரையில் வீபிஷணாழ்வானுக்கு அளித்த அபயம் போல, நீதியரசனாக பெருமை வாய்ந்த நியாய ஆசனத்தில் அமர்ந்து எங்கள் குறைகளை ஆராய்ந்து தீர்ப்பு வழங்குவது தான் முறை" என்று குறிப்பில் சொல்வதாகவும் அறியலாம்.

• அதோடு, விடியலில் எழுந்திருந்து, நோன்பின் பெருமையையும், ஸ்ரீகண்ணனின் திருநாமங்களையும் பாடி, ஒவ்வொரு அடியவராக (இடைச்சியர்) எழுப்பி, திருமாளிகை காப்பானின் அனுமதி பெற்று, நந்தகோபர், யசோதை, நப்பின்னையை பிராட்டியை எழுப்பி என்று மிகவும் சிரமப்பட்டு கோபியர் கண்ணனிடத்தில் வந்து சேர்ந்ததிலும் ஸ்ரீகோதை நாச்சியார் ஒன்றைக் குறிப்பால் உணர்த்துகிறாள். அதாவது, சரணாகதி (ப்ரபத்தி) என்பது, "எல்லாம் அவன் செயல்" என்று வெறுமனே இருப்பதாகாது, அதற்கு சுயமுயற்சியும், உழைப்பும் அவசியமாகிறது!

•  "மாரி மலை முழைஞ்சில் மன்னிக் கிடந்து உறங்கும்
சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீ விழித்து"
என்பது, பாவ புண்யங்களுக்கு அப்பாற்பட்ட திவ்ய ஞானத்தைப் பெற, லஷ்மி நரசிம்மரைப் பற்ற வேண்டியதை உள்ளர்த்தமாக வலியுறுத்துகிறது.

 • "வேரி மயிர் பொங்க எப்பாடும் பேர்ந்து உதறி
மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்
போதருமா போலே நீ"
என்பது, லஷ்மி நரசிம்மரின் கல்யாண குணங்களை போற்றிப் பாடி திசைகளெங்கும் பரப்பும் அடியார்கள் பரமபதம் அடைவர் என்பதை உள்ளர்த்தமாகக் கொண்டுள்ளது !

• பூவைப்பூ - கருநீல நிறத்து சங்க கால மலர். பெண்கள் நெற்றியில் அணியும் பொட்டைப் போல இருக்கும் அதனால் பூவை (பெண்) + பூ. கண்ணனுடைய கம்பீரத்திற்கு உவமையாக சிங்கத்தைச் சொன்ன ஆண்டாள் கண்ணனுடைய மேனி நிறத்தைக் குறிக்கப் பூவினை உவமையாக்குகிறாள்.


• (கோயில் நின்று  இங்கனேப் போந்தருளி)  ஆண்டாள் அரங்கர்க்குப் பண்ணிய திருப்பாவையல்லவா? கோயில் என்பது ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு திருவரங்கத்தையே குறிக்கும். அதனால் தான் படுத்திருக்கும் பரந்தாமனது அழகைப் பாடினாள். ஆயினும், அவனே எழுந்து நடந்து வந்தால் அந்த அழகு எப்படி இருக்குமென்று காண விரும்பியே, கண்ணனை அவனது மாளிகை நீங்கி, சபைக்கு எழுந்து நடந்து வர வேண்டுகிறாள். திருவரங்க திவ்யதேசத்தில் நம்பெருமாளின் நடையழகு கண்டவர்கள் இப்பாசுரத்தில் இனிதே அனுபவிப்பர்.

• ப்ரபத்தி என்பது எல்லாம் அவன் அருள் என்று சும்மாக் கிடப்பதல்ல, அதன் அளவில் அதுவும் ஒரு போராட்டமே! என்று குறிப்பால் உணர்த்துகிறாள். இப்படி நாங்கள் கஷ்டப்பட்டு உன்னை அடைந்திருக்கிறோம். ‘ப்ரஜை கிணற்றில் விழுந்தால், தாயன்றோ நோக்காதே பரிய விட்டாளென்பார்கள்’ என்றார் வியாக்கியானத்தில். இப்படி நாங்கள் கஷ்டப்பட நீயன்றோ காரணம்! ஆகையால் இப்படி நாங்கள் வந்ததை நீ ஆராய்ந்து, அறிவுற்று பார்த்தால், அருளுவாய் என்று சொல்கிறாள். இன்னும் இவர்கள் தாம் வந்த காரியத்தை சொல்லவில்லை. அதை "சிற்றஞ் சிறுகாலே" (திருப்பாவை-29) பாட்டில் வைத்தார்கள். இங்கே எழுந்து வந்து நாங்கள் வந்த காரியத்தை ஆராய வேண்டும் என்று ப்ரார்திக்கிறார்கள்.

          ||திருப்பாவை ஜீயர்||


 அறிவுற்றுத் தீ விழித்து வேரி மயிர் பொங்க எப்பாடும் பேர்ந்து உதறி மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்படும் சீரிய சிங்கம்  நம் யதிஸார்வ பௌம ஸிம்ஹம் தவிர வேறுண்டோ? ராமாநுஜர் நூற்றந்தாதியில், "கலிமிக்க செந்நெல் கழனிக்குறையல் கலைப்பெருமானொலி மிக்க பாடலையுண்டு தன்னுள்ளம் தடித்து அதனால் வலிமிக்க சீயமிராமாநுசன்" என்று சீரியசிங்கமாகச் சொல்லப்பட்டவர் நம் ஸ்வாமி. உலகில் சிங்கம் ஹேயமான உணவை உண்டு செருக்காயிருக்கும். யதிராச சிம்ஹம் திருமங்கையாழ்வாருடைய திவ்ய ஸூக்திகளையுண்டு அதனால் தடித்திருக்கும் என்கிறார் அமுதனார். இதற்கு மழையும் முழைஞ்சும் விலக்ஷணமாயிருக்கும்.
முந்நூறு ஆண்டு வேதமோதின பாரத்வாஜ மஹரிஷிக்கு தேவேந்திரன் வேதத்தை மலையளவு காட்டினதாக வேதமே கூறுயதால் வேதம் மலையளவு உடையது. அதில் முழஞ்சாவது தர்மஸ்ய தத்வம் நிஹிதம் குஹாயாம் என்னும்படி  தர்ம சூட்சுமங்கள் பொதிந்திருக்கும் இடம். அதில் மன்னிக் கிடந்து லௌகீக விஷயங்களில் திருக்கண் செலுத்தாதே, ஆத்மந்யேவந ஆத்மாநாம்  பச்யந் சுகித்திருப்பவர் ஸ்வாமி ராமாநுஜர்.




அவதார பிரயோஜனம் குறிக் கொண்டு
புத்திர் மநீஷா தீஷணா தீ -தீ விழித்து-விகசித்து

(எப்பாடும் பேர்ந்து உதறி)
"ஸ்ரீ ரெங்கம் கரிசைலம் அஞ்சனகிரிம் தார்ஷ்யாத்ரி சிம்ஹாசலௌ
ஸ்ரீ கூர்மம் புருஷோத்தமஞ்ச பத்ரி நாராயணம் நைமிசம்
ஸ்ரீமத த்வாராபதி ப்ரயாகா மதுரா அயோத்யா கயாபுஷ்கரம்
சாளக்ராமகிரிம் நிஷேவ்ய ரமதே ராமானுஜோயம் முனிம்"  என்கிறபடியே எண்டிசையும் பாதசரத்தாலே சஞ்சரித்து, ஆங்காங்கு விபக்ஷர்களுண்டாகில் அவர்களை உதறியருளினவர் ஸ்வாமி.




 ஸ்ரீஆண்டாள் திருவடிகளே சரணம்!
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்!!

தொடர்ச்சி  அடுத்த பதிவு - Post ல  பார்ப்போம்.

                அன்புடன்

      ஸ்ரீ பா ல சு பி க் ஷ ம்
E.P.I. இராம சுப்பிரமணியன்.





Comments

Popular posts from this blog

சிறுதெய்வங்களோடு வந்த பெருந்தெய்வங்கள் (பகுதி-1)

காலந்தோறும் மதுரை (பகுதி − 1)

கோதையின் கீதை (பகுதி - 33)